திமுகவிலிருந்து கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம்... மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை
சென்னை: திமுகவிலிருந்து கு.க.செல்வத்தை நிரந்தரமாக நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்.
கு.க.செல்வத்திடம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியது தொடர்பாக கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அவர் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டால் எத்தகைய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்பதை இதன் மூலம் உணர்த்தியுள்ளார் ஸ்டாலின்.
விநாயகர் சதுர்த்தி.. தெருக்களில் சிலை வைக்கக் கூடாது.. வீட்டிலேயே கொண்டாடுங்க.. தமிழக அரசு உத்தரவு
நட்டாவுடன் சந்திப்பு
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் கடந்த 4-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பாஜகவில் கு.க.செல்வம் இணைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில் அதனை மறுத்த அவர் தொகுதிப் பிரச்சனைகள் காரணமாக பியூஸ் கோயலை சந்தித்துவிட்டு அப்படியே நட்டாவையும் சந்தித்தாக திக்கி திணறி புதுமையான விளக்கம் அளித்தார்.
விளக்கம் கோரி
இதையடுத்து தன்னை முடிந்தால் நீக்கட்டும் என திமுக தலைமைக்கு டெல்லியில் சவால்விட்ட கு.க.செல்வத்திற்கு, விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியதோடு இடைநீக்கமும் செய்தார் ஸ்டாலின். மேலும், அவர் கட்சியில் வகித்த தலைமை நிலையச் செயலாளர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளும் அப்போதே பறிக்கப்பட்டன.
ஸ்டாலின் அதிரடி
இந்நிலையில் இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின், அதில், ''கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்த கு.க.செல்வத்திடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அவர் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாத காரணத்தால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்'' எனத் தெரிவித்துள்ளார்.
கட்டம் கட்டிய ஸ்டாலின்
கு.க.செல்வம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் அவர் மீதான நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் அவசரம் காட்டமாட்டார் எனக் கட்சியினர் கருதி வந்த நிலையில், அதிரடி ஆக்ஷனில் இறங்கி கட்டம் கட்டிவிட்டார் அவர். இதன் மூலம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டால் திமுகவில் எத்தகைய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்பதை உணர்த்தியுள்ளார்.