மும்மொழிக் கொள்கையை மறைமுகமாக ஆதரிக்கிறதா தமிழக அரசு...? சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை: மும்மொழிக் கொள்கையை மறைமுகமாக ஆதரிக்கிறதா தமிழக அரசு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மொழிக் கொள்கை பற்றி விவாதிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சரிடம் சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.
சட்டசபை நிறைவுநாளான இன்று ஸ்டாலின் பேசிய விவரம் பின்வருமாறு;
தமிழக சட்டசபை தேர்தலில் பாமகவுடன் விசிக கூட்டணி என்பதே கிடையாது: திருமாவளவன் திட்டவட்டம்
சமஸ்கிருத மொழி
''தேசிய கல்விக் கொள்கை-2020, மாநிலங்களின் கல்வி உரிமைக்கு எதிரானது. சமஸ்கிருத மொழிக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், தமிழ் மொழிக்கும் - ஏனைய இந்திய மொழிகளுக்கும் இல்லை. ஊட்டச் சத்தையும், ஆரோக்கியத்தையும் இணைத்து வழங்கப்பட வேண்டிய மழலையர் பருவத்தில் முறைசார்ந்த கல்வி என்பது, குழந்தைகளின் உரிமைகளுக்கு, மனித உரிமைகளுக்குப் புறம்பானது''.
கல்விமுறை சீர்குலைப்பு
''3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு; ‘பிளஸ் டூ' கல்விமுறையில் மாற்றம் எல்லாம், நம் மாநிலத்தில் வெற்றிகரமாகச் செயல்படும் கல்விமுறையைச் சீர்குலைப்பது ஆகும். ‘குலக்கல்வி'த் திட்டத்தின் மறுவடிவமாக வரும் தொழிற்கல்வி, ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பணி குறித்த தர நிர்ணயம் ஆகியன ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருக்கின்றன''.
தாய்மொழி
''கலை மற்றும் அறிவியல் - பட்டயப் படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு ; வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது; மாநிலங்களில் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடங்களைத் தேசிய அளவில் வகுப்பது ஆகியன ஆபத்தானவை. 5-ஆம் வகுப்பு வரை, "முடிந்தால் தாய்மொழியில்" கற்றுக் கொடுக்கலாம் என்பது - தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள, "தமிழ்க் கற்றல் சட்டம்-2006"-க்கு எதிரானதாகும்''.
மறைமுக ஆதரவு?
''இன்று மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜைகள் மீதும் ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருக்கிறது. அப்புத்தகத்தில் தாவரங்களின் பெயர்கள் எல்லாம் வரிசைப்படுத்தி போடப்பட்டிருக்கிறது. படங்களுடன் அழகாக அது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள பெயர்கள் தமிழில் போடப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பெயர் போடப்பட்டிருக்கிறது. நான் கேட்கிற கேள்வி என்னவென்றால், இது மும்மொழித் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைந்திருக்கிறதா - இல்லையா?''
முதல்வரிடம் கோரிக்கை
''தமிழும் - ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை தமிழகத்தின் உயிர் மூச்சாக - உயிர் நாடியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே இதுகுறித்து உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதலமைச்சர் விவாதிக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் அழுத்தம் திருத்தமாகக் கேட்டுக்கொண்டு, சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றித் தரவேண்டும்''.