இந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா?.. இது இந்தியாவா? "இந்தி"- யாவா?.. முக ஸ்டாலின் கேள்வி
சென்னை: இந்தி தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? "இந்தி"- யாவா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் கூறுகையில் இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர்
@KanimozhiDMK வை பார்த்துக் கேட்டுள்ளார்.
இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? "இந்தி"-யாவா? பன்முகத் தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்! என்றார் ஸ்டாலின்.
பாதுகாப்பு படை
சென்னை விமான நிலையத்தில் கனிமொழயிடம் ஒரு பாதுகாப்பு துறை அதிகாரி, "நீங்கள் ஒரு இந்தியரா" என கேள்வி எழுப்பியதாக ட்விட்டரில் புகார் தெரிவித்தார். இது குறித்து ட்விட்டரில் கனிமொழி கூறுகையில் இன்று விமான நிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த (சிஐஎஸ்எஃப்) பெண் போலீஸ் என்னிடம் இந்தியில் எதையோ சொன்னார்.
ஆங்கிலம்
அதற்கு நான் எனக்கு இந்தி தெரியாது, ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் என்றேன். உடனே அவர் நீங்கள் இந்தியரா என கேட்டார். உடனே நான் திடுக்கிட்டேன். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என எப்போது முடிவு செய்யப்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன் என ட்விட்டரில் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தகவல்
இதுகுறித்து தகவலறிந்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள், பாதுகாப்பு படை அதிகாரியிடம் கனிமொழியின் தேசியம் குறித்து கேள்வி எழுப்பியதை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். ஒரு குறிப்பிட்ட மொழியைதான் பேச வலியுறுத்துவது என்பது தொழிலக பாதுகாப்பு படையின் கொள்கையும் அல்ல என விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்கள். இதற்கு கனிமொழி எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை
இதுகுறித்து கனிமொழி கூறுகையில் நான் சென்னையில் இருந்து டெல்லியில் வந்து இறங்கியதும் என்னை அதிகாரிகள் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பெருமை என்பதை உணர வேண்டும் என கனிமொழி கூறினார்.