திமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்துவிடும் -ஸ்டாலின் மடல்
சென்னை: திமுகவில் உட்கட்சி பகை வேண்டாம் என்றும், அது கட்சியையே அழித்துவிடும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைவோம், வென்றிடுவோம் என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது;
உட்கட்சி ஜனநாயகம்தான் 70 ஆண்டுகால திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனிப்பெரும் சிறப்பு. திமுக பொதுக்குழு என்றாலே அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, நாம் மட்டுமல்ல; நாடே எதிர்பார்ப்பது வழக்கம்.
ஆர்டிஐ கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வருமா?.. நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
நெருப்பாற்றில் நீந்தி
ஆட்சியாளர்களோ தங்கள் தவறைத் திருத்திக் கொள்ளாமல் கழகத்தின் மீது அவதூறுகளைப் பரப்பி, ஊடகங்களில் பேசுபொருளாக்குவதில் மட்டுமே கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய அவதூறுகளை எத்தனையோ முறை எதிர்கொண்டு நெருக்கடி நெருப்பாற்றில் நீந்தி, புடம் போட்ட தங்கமாக - தகதகவென ஒளிரும் தன்மையுடன் வெற்றிக்கரையேறிய வரலாறு தி.மு.கழகத்திற்கு உண்டு.
உள்பகை வேண்டாம்
நமக்குள் ஒற்றுமை வேண்டும்; ஒருங்கிணைப்பு வேண்டும். அடிமட்டத் தொண்டர்களை அரவணைக்க வேண்டும்; வெளிப்பகை என்பது கண்களுக்குப் புலப்படக்கூடியது. அதனை எதிர்கொண்டு வெல்ல முடியும். உள்பகை என்பது அத்தனை எளிதாகக் கண்களுக்குப் புலப்படாது. புரையோடி அது நம்மையே அழித்துவிடும்.உள்பகை இல்லாத உன்னத நிலையைக் கழகத்தில் உருவாக்கிட வேண்டும். அதைத்தான் பொதுக்குழுவில் உரையாற்றிடும்போது எடுத்துரைத்தேன்.
தினமும் அவதூறு
மிசா சிறைவாசம் குறித்து அவதூறு, முரசொலி நிலம் குறித்து அவதூறு என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆட்சியில் இல்லாத கழகத்தை நோக்கி அவதூறு - பொய்கள் பரப்புகிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் நாம் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பது தான்.
திமுக மீது உரிமை
கழகப் பொதுக்குழுவின் அத்தனை சிறப்பம்சங்களையும் மறைத்துவிட்டு, "ஸ்டாலின் சர்வாதிகாரி ஆகிறாரா?" என ஊடகங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஊடகத்துறை நண்பர்களின் இக்கட்டான நிலையை நான் அறிவேன். ஆட்சியில் இல்லாத தி.மு.க.,தான் அன்றாடம் மக்கள் பிரச்சினைகளைப் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்களைப் பற்றி நாம் ஒரு பிரச்சினையைக் கிளப்புவோம் என்றுகூட அவர்கள் நம்மிடம் உரிமை எடுத்துக் கொள்ளலாம்.
ஜனநாயக இயக்கம்
கழகம் ஒரு ஜனநாயக இயக்கம். அதன் வழிமுறைகள் ஜனநாயகத்தன்மை வாய்ந்தவை. உங்களில் ஒருவனான நானும் அந்தத் தன்மையுடன் செயல்படக்கூடியவன்தான். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பொதுக்கூட்டம், தெருமுனைப் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம், துண்டறிக்கை வழங்கல் எனத் தொடர்ச்சியாக நமக்கான களம் காத்திருக்கிறது.
வெற்றிக்கு கட்டியம்
இது நமது வெற்றிக்கான தொடக்கப்புள்ளி என்று பொதுக்குழுவில் குறிப்பிட்டேன். அந்தப் புள்ளி, கோடாக நீள வேண்டும். கேடு மிகுந்த ஆட்சியாளர்களை விரட்டிடும் படையாக வேண்டும். வெற்றி வரலாற்றுக்குக் கட்டியம் கூறிடும் பொதுக்குழுவில் சொன்னவற்றை மனதில் கொண்டு, பொதுத்தேர்தலில் செய்து காட்டுவோம்.