தமிழக அரசுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டிய நிர்பந்தம் பிரதமருக்கு ஏன்? -மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு படுதோல்வி அடைந்துள்ள நிலையில் அந்த அரசுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டிய நிர்பந்தம் பிரதமருக்கு ஏன் வந்தது என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா விவகாரத்தில் கடவுள் மீது பாரத்தை சுமத்தி கைவிரித்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
160 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டம்... குடைச்சல் தரும் அதிருப்தியாளர்களை யார்தான் சமாளிப்பது?
கைவிரித்த முதல்வர்
கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல் - மூச்சுத் திணறி - "எப்போது கொரோனா குறையும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்" என்று கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு, முதலமைச்சரே கைவிரித்து விட்ட பிறகு - அவர் தலைமையிலான அரசு "சிறப்பாக நடவடிக்கை" எடுத்திருக்கிறது என்று பாராட்டும் நிலையும், நிர்ப்பந்தமும் பிரதமருக்கே ஏன் ஏற்பட்டிருக்கிறது என்பது விந்தையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
புள்ளிவிவரம் மறைப்பு
மத்தியில் பா.ஜ.க. அரசு எப்படி "புள்ளிவிவரங்கள் இல்லாத" அரசாக நடக்கிறதோ, அதே மாதிரித்தான் அதிமுக அரசும் "புள்ளிவிவரங்கள் இல்லாத" அல்லது "புள்ளிவிவரங்களை மறைக்கும் - குறைக்கும் அரசாக" நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மாவட்ட மருத்துவமனை வாரியாக- ஆய்வகங்கள் வாரியாக, கொரோனோ சோதனை விவரங்களைக் கொடுக்க இன்றுவரை அதிமுக அரசால் இயலவில்லை.
ரகசிய விசாரணை
கொரோனாவில் அதிமுக அரசு சிறப்பாக நடவடிக்கை எடுக்கிறது என்ற "பாராட்டுப் பத்திரத்தை" வழங்கியிருக்கும் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள்- தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய உளவுத்துறை மூலம், ஒரு "ரகசிய விசாரணைக்கு" உத்தரவிட்டு- அதிமுக அரசின் கொரோனா படுதோல்விகளையும்- கொரோனா பாதுகாப்பு சாதனங்கள் கொள்முதல் ஊழல்களையும் விரிவாகத் தெரிந்து கொள்ளாலாம். தமிழக மக்கள் நலன் மீது பிரதமருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கும் என நம்புகிறேன்.
நன்றிக்கடன்
நாட்டின் பெரும்பான்மையானோயோர் எதிர்க்கும் "வேளாண் மசோதாக்களை" ஆதரித்த காரணத்திற்காகவும்; அன்றைய தினம் பிரதமருடனான காணொலி ஆலோசனையின் துவக்கத்திலேயே, "விவசாயிகளுக்கு ஆதரவான மூன்று வேளாண் மசோதாக்களைக் கொண்டு வந்த உங்களைப் பாராட்டுகிறேன்" என்ற முதலமைச்சர் திரு. பழனிசாமியின் "முகமனை" ஒட்டியும்; கொரோனா பேரிடரில் தவியாய்த் தவிக்கும் தமிழக மக்களின் உணர்வுகளைக் குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம் என்று பிரதமர் அவர்களை மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.