டாஸ்மாக் கடைகள் திறப்பு... அப்படியெனில் ஊரடங்குக்கு உண்மையான பொருள் என்ன ? -மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழலில், 'எல்லாம் சரியாகி வருகிறது' என்ற தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு நினைக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊரடங்கை பிறப்பித்துவிட்டு டாஸ்மாக் கடைகளை திறந்தால் ஊரடங்கு என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்பதை அரசு விளக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
சென்னை மாநகரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.. தமிழக அரசு முக்கிய விளக்கம்
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அதிர்ச்சி; அச்சம்
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அச்சம் தருவதாகவும், அதிர்ச்சியை ஊட்டுவதாகவும் பீதியை ஏற்படுத்துவதாகவும் மாறிக் கொண்டு இருக்கிறது. பத்து, இருபதாக அதிகரித்த எண்ணிக்கை முந்நூறு, நானூறாக அதிகரித்து வருவது எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்று கணிக்க முடியாததாக இருக்கிறது.
நோய் பரவல் தடுப்பு
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை அரசு அறிவிக்கும் போதெல்லாம், 'எவ்வளவு பேருக்குப் பரிசோதனை செய்தீர்கள்?' என்ற கேள்வியை நான் எழுப்பி வந்தேன். பரிசோதனைகள் செய்யச் செய்யத் தான் இவை அனைத்தும் வெளிச்சத்துக்கு வருகின்றன. எனவே, நோய் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இணையானது நோய் வராமல் தடுப்பது. அத்தகைய தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். போர்க்காலத்தைவிட இது பேரச்சம் தருகின்ற பேரழிவுக் காலமாக இருக்கிறது.
கோயம்பேடு மீது முழுப்பழி
எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதனை முன்கூட்டியே எடுங்கள், முன்கூட்டியே மக்களுக்கு அறிவியுங்கள் என்பதையும் சொல்லி வந்தேன். மார்ச் 24-ம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்திலும், பெருங்களத்தூர், தாம்பரம் நிலையங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியதும், ஏப்ரல் 25-ம் தேதி கோயம்பேடு காய்கறி அங்காடியில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியதும், அரசாங்கத்தின் திட்டமிடுதலிலும் செயலாக்கத்திலும் இருந்த மெத்தனமும் அலட்சியமுமே தவிர, மக்களைக் குறை சொல்ல முடியுமா? இன்றைக்கு 'கோயம்பேடு' மீது முழுப்பழியையும் போடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
என்ன பயன்?
மே 1-ம் தேதி சென்னைக்கு எனச் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மண்டல வாரியாக ஐ.பி.எஸ். அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏப்ரல் 19-ம் தேதியில் இருந்தே அதிகமாகி வந்தது. அப்போதே சிறப்பு அதிகாரியை நியமித்திருக்க வேண்டும். கொரோனா கட்டுக்கடங்காமல் ஆனபிறகு கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு அதிகாரி போடுவதால் என்ன பயன்?
எதற்கு வரப்போகிறார்கள்?
பொதுமக்கள், தாங்கள் இருக்கும் இடத்திலேயே தேவைகள் பூர்த்தியானால் எதற்காக வெளியே வரப்போகிறார்கள்? வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு அரசு இதுவரை சிந்திக்கவில்லை. அதனால்தான் வெளியில் வருகிறார்கள் மக்கள். கொரோனா பரிசோதனைகள்கூட, அவர்கள் வாழும் இடங்களுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் செய்யப்படுவதில்லை. அதற்கும் அவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் வரவேண்டி உள்ளது. மொத்தமாக மக்கள் கூடுவதற்கான தேவையை அரசே ஏற்படுத்துகிறது.
அரசியல் வேண்டாம்
மக்களைக் காக்க வேண்டிய தமிழக அரசு, அரசியல் உள்நோக்கமற்று, தீர ஆலோசித்து, பலதரப்பட்டவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, விரைந்து சிந்தித்து ஆக்கபூர்வமான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்த வேண்டும். மக்களின் உயிர் மகத்தானது. அதனை அரசியலால், அறியாமையால், ஆணவத்தால் இழந்துவிடக்கூடாது.