ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை.. சந்திரசேகர ராவ், ஸ்டாலின் பிரஸ் மீட்டை தவிர்த்தது ஏன்? இதுதான் பின்னணி
சென்னை: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் ஆகியோர் நடுவே இன்று முக்கியமான ஆலோசனை நடைபெற்று உள்ளது.
லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சந்திரசேகரராவ், மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதன் ஒரு பகுதியாக, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இன்று அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார் சந்திரசேகரராவ்.
அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிறிய வடிவிலான சிலையை சந்திரசேகர ராவுக்கு ஸ்டாலின் நினைவு பரிசாக வழங்கினார்.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இரு தலைவர்களும் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு, மாலை 6 மணியளவில் சந்திரசேகர ராவ், ஸ்டாலின் இல்லத்தை விட்டு வெளியேறினார். அப்போது இரு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு பேட்டியளிப்பார்கள் என்ற, எதிர்பார்ப்பில் நிருபர்கள் பெருவாரியாக குவிந்திருந்தனர்.
ஆழ்வார்பேட்டைக்கு வந்தார் கேசிஆர்.. ஸ்டாலினை சந்தித்தார்.. ஆலோசனைக்கு பின் திரும்பி சென்றார்!
ஒரு மணி நேரம்
ஆனால் சந்திரசேகரராவ் அல்லது ஸ்டாலின் ஆகிய இருவரில் ஒருவர் கூட நிருபர்களை சந்திக்கவில்லை. இது தொடர்பாக, மூத்த பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இரு தலைவர்கள் நடுவே ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஒரு விஷயம் குறித்து தான் பேசப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், சந்திரசேகரராவ், மற்றும் ஸ்டாலின் இருவரும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது. அவர்கள், இடையே, ஒரு மணி நேரமாக ஆலோசிப்பதற்கு, அரசியல் தவிர்த்து விட்டு வேறு விஷயங்கள் இருக்க முடியாது.
உடன்பாடு இல்லை
சந்திரசேகரராவ் முன்வைத்த யோசனையை ஸ்டாலின் ஏற்று இருக்க மாட்டார் (3வது அணி அமைப்பது) என்று தெரிகிறது. இருவருக்கும், உடன்பாடு எட்டப்பட்டு இருந்தால் இருவருமே நிருபர்களுக்கு பேட்டி அளித்து இருக்க வாய்ப்பு இருந்தது. அல்லது இப்போதைக்கு எந்த ஒரு விஷயத்தையும் வெளியே சொல்லக்கூடாது என்று இரு தலைவர்களும் முடிவெடுத்து இருக்கக் கூடிய விஷயமாகவும் இருக்கலாம். அதனால்கூட, செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றிருக்க கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேர்தல் நேரம்
மேலும் சில அரசியல் பார்வையாளர்கள் கருத்து வேறாக உள்ளது. தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், வாக்காளர் மனநிலையை பாதிக்கக் கூடிய எந்த விஷயத்தையும் பேசக்கூடாது என்பது விதிமுறை. எனவே ஸ்டாலின் மற்றும் சந்திரசேகர ராவ் இருவரும் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.
மரியாதை
மேலும் சிலர் கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று திமுக தரப்பில் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிப்பது இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை மேலும் அதிகப்படுத்திவிடும். இதனால் காங்கிரஸ் அதிருப்தி, அடையக் கூடும் என்பதால் செய்தியாளர் சந்திப்பை ஸ்டாலின் தவிர்த்திருக்கலாம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. இந்த சந்திப்பு பற்றி, திமுக சார்பில் செய்தியாளர்களுக்கு ஒரு அறிக்கையாக அல்லது சமூக வலைத்தளத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட தான் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் சிலர். இதேபோல, திமுக தலைமை மாலை 6.30 மணியளவில், இந்த சந்திப்பு பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், சந்திரசேகர ராவ்-ஸ்டாலின் நடுவே நடந்தது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.