பிறந்த நாள்.. கொண்டாட்டம் வேண்டாம்.. காஞ்சிபுரம் பண்ணை வீட்டில் குடும்பத்துடன் ஸ்டாலின் ஓய்வு
காஞ்சிபுரம் பண்ணை வீட்டில் குடும்பத்துடன் மு.க.ஸ்டாலின் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: எந்தவித பிறந்த நாள் கொண்டாட்டமும் வேண்டாம் என்று முக ஸ்டாலின் முடிவெடுத்து விட்டாராம். அதற்காக சென்னையை விட்டே இன்றைய தினம் ஒதுங்கி இருக்கவும் முடிவு எடுத்துள்ளாராம்.
ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் என்றால், முக ஸ்டாலின் முதல்வேலையாக, கருணாநிதி-தயாளு அம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுவிடுவது வழக்கம்.
இதற்கு பிறகுதான் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் வாழ்த்து, மற்றும் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஸ்டாலின் ஈடுபடுவார். ஆனால் இந்த வருடம் கருணாநிதி உயிருடன் இல்லை என்பதால், பிறந்த நாள் கொண்டாடும் மனநிலையில் தான் இல்லை என்று ஸ்டாலின் அன்றே சொல்லி இருந்தார்.
[Read more: பேசாமல் கொடுப்பதை வாங்கிக்குவோமா.. இல்லை தனியா நிப்போமா.. கட்சியினருடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை]
அவசியமற்றவை
இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் கடந்த வாரம் பேசியபோதுகூட, "கருணாநிதி இறந்து ஒரு வருடம்கூட முடியவில்லை. கருணாநிதி இல்லாத நிலையில் பிறந்த நாள் நிகழ்வுகள் அவசியமற்றவை. பிறந்த நாளை கொண்டாடும் மன உணர்விலும் நான் இல்லை" என்றும் தெரிவித்திருந்தார்.
வேண்டுகோள்
அதேபோல, "என் பிறந்த நாள் விழா எனும் பெயர் ஆடம்பர விழாக்களை தவிர்த்துவிட்டு, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நல திட்ட உதவிகளை வழங்க வேண்டும்" என்றும் தொண்டர்களுக்கு அறிக்கை மூலம் வேண்டுகோளும் விடுத்திருந்தார் ஸ்டாலின்.
அன்பு தொல்லை
எனினும் அன்பு தொல்லை காரணமாக தொண்டர்களும் நிர்வாகிகளும் காலையிலேயே பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வீட்டில் குவிந்து விடுவார்கள் என்பதால், சென்னையில் இன்று தங்கி இருக்க வேண்டாம் என ஸ்டாலின் முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது.
பண்ணை வீடு
அதற்காக குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தன் பண்ணை வீட்டிற்கு ஸ்டாலின் சென்றுவிட்டாராம். அங்குதான் குடும்பத்தினருடன் இன்றைய நாளை கழிக்க இருப்பதாகவும் நம்பத்தகுந்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. எனினும் இன்று மாலையே ஸ்டாலின் வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
நலத்திட்ட உதவிகள்
ஏற்கனவே பிறந்த நாள் விழா கொண்டாட்டம் வேண்டாம் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால், நிர்வாகிகளும் தொண்டர்களும் ஸ்டாலின் சொன்னதைபோலவே நலத்திட்ட உதவிகளில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள்.