மகன், மருமகன் பேரன் பேத்திகளோடு மாட்டுப்பொங்கல் கொண்டாடிய மு.க ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கல் திருநாளைக் கொண்டாடினார்.
சென்னை: மகன்,மருமகள், மருமகன், பேரன் பேத்திகள் என குடும்பத்தோடு மாட்டுப்பொங்கலை கொண்டாடியுள்ளார் திமுக எதிர்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின். கையில் சாட்டை கம்பு வைத்துக்கொண்டு மாட்டு வண்டி ஓட்டி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. தேர்தல் காலமாக இருப்பதால் அரசியல் தலைவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சொந்த ஊர்களில் கிராம மக்களுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். சொந்த ஊரில் மாட்டுவண்டி ஓட்டினார் துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம்.
திமுக இந்துகளுக்கு எதிரி அல்ல... என்னுடைய துணைவியார் போகாத கோயிலே கிடையாது -ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்
திமுகவினர் ஆண்டு தோறும் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு திமுக தலைவர் ஸ்டாலின், தனது மனைவி துர்க்கா ஸ்டாலினுடன் இணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினார். மாட்டுப்பொங்கலை தனது குடும்பத்தோடு கொண்டாடியுள்ளார்.
அகத்திக்கீரை வாழைப்பழம்
மு.க ஸ்டாலின் தனது மனைவி துர்கா,மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா, மருமகன், பேரன் பேத்திகள் என அனைவருடனும் மாட்டுப்பொங்கலை கொண்டாடினார். பசுவிற்கு அகத்திக்கீரையும், வாழைப்பழமும் கொடுத்தனர்.
மாட்டு வண்டி ஓட்டிய ஸ்டாலின்
அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் காளைகளைப் பூட்டி கையில் சாட்டையை எடுத்துக்கொண்டு ஜல் ஜல் என்று மாட்டு வண்டியை ஓட்டினார் ஸ்டாலின்.
பசுவிடம் ஆசி
பொங்கல் பண்டிகை இயற்கைக்கும், உழவுக்கும், விவசாயிகளுக்கும் உதவும் காளைகளுக்கும் நன்றி கூறும் பண்டிகை. பசுவும் கன்றும் இணைந்திருக்க தலையில் பச்சைத் துண்டு கட்டிக்கொண்டிருந்த ஸ்டாலின் கன்றை கையில் பிடித்திருக்க மகன் உதயநிதியும் மருமகனும் இணைந்து பசுவை பிடித்திருக்க உற்சாக போஸ் கொடுத்தனர்.
அரசியல் பொங்கல்
சட்டசபைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரப்போகிறது. இந்த பொங்கலை அனைத்து அரசியல் கட்சியினரும் சரியாக பயன்படுத்திக்கொண்டனர். பாஜகவின் நம்ம பொங்கல், காங்கிரஸ் கட்சியின் ராகுலின் பொங்கல், திமுகவின் சமத்துவ பொங்கல் என இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அரசியல் பொங்கலாக மாறி விட்டது.