என்னதான் விமர்சனமா இருந்தாலும் இது கடுமையான வார்த்தையாச்சே.. ஸ்டாலின் இப்படி பேசலாமா!
டாக்டர் ராமதாசை விமர்சித்து ஸ்டாலின் சொன்ன கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Recommended Video
சென்னை: அது என்ன அப்படி ஒரு வார்த்தையை சட்டென சொல்லிவிட்டார் மு.க.ஸ்டாலின்!
அதிமுக - பாமக கடுமையாக விமர்சிக்கப்படும் அதே நேரத்தில், திமுக காங்கிரஸ் உறவு குறித்தும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் கிளம்பியுள்ளது. பாமக அதிமுக உறவு சந்தர்ப்பவாதம் என்றால் திமுக காங்கிரஸ் உறவுக்கு பெயர் என்ன என்று கேட்க ஆரம்பித்துள்ளனர்.
ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது உலகத் தமிழர்களை உலுக்கிய பல சம்பவங்களை நாம் நேரில் கண்டு பதைத்து நின்றோம். உதவிக் கரம் கூட நீட்ட முடியாத நிலை. டெல்லியில் அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கூட்டணி அரசு.
திமுக குற்றச்சாட்டு
திமுகவும் அதில் ஒரு அங்கம். மிருகத்தனமான ஈனப் படுகொலையை ஈழத்தில் ராஜபக்சே அரசு நடத்தியபோது அதை கண்டு அமைதி காத்தது காங்கிரஸ். அதை உரிய வகையில், வலுவான முறையில் தட்டிக் கேட்க தவறியது திமுக என்ற குற்றச்சாட்டு இன்னும் கூட தமிழர்கள் மத்தியில் உள்ளது.
கண்டனம்கூட இல்லை
போருக்குப் பின்னரும் கூட எத்தனையோ வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி மனங்களை உலுக்கின. பச்சிளம் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொல்லப்பட்ட காட்சிகள் உலகை உலுக்கின. ஆனால் காங்கிரஸ் கப்சிப் என்றுதான் இருந்தது. ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. பதைக்கவில்லை, அதிர்ச்சி அடையவில்லை.
என்ன தகுதி இருக்கிறது?
ஆனால் இப்படிப்பட்ட காங்கிரஸை தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு சவாரி செய்ய திமுக துடிப்பதை சமூக வலைதளங்களிலும் பலரும் சுட்டிக் காட்டி இப்படிப்பட்ட கட்சிக்கு, அதிமுக பாமகவை விமர்சிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது, தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள்.
சிதறடித்தவர் வைகோ
அதேபோலதான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இணைத்தும் விமர்சித்து வருகிறார்கள். திமுகவுக்கு வரவேண்டிய ஓட்டுக்களை மக்கள் நலக்கூட்டணி என்று ஒன்றை ஆரம்பித்து சிதறடித்தவர்தான் வைகோ. ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று இன்று சொல்லும் இதே வைகோதான் அன்று ஸ்டாலினை முதல்வராகாமல் இருக்க செய்வதே தன்னுடைய முதல் வேலை என்றார்.
காரசார ட்வீட்கள்
அறிவு, திறமை, அனுபவம் என இருந்தாலும் திடீர் திடீர் என்று உணர்ச்சி வசப்படும் ஒரு அரசியல்வாதியான வைகோவை கூடவே வைத்திருக்கும் ஸ்டாலின் இதுவரை அவரை விமர்சிக்காமல் கூடவே கூட்டணி வைத்திருக்கிறார். எதையுமே பொறுமையாகவும், பக்குவமாகவும், குறிப்பாக தமிழிசை சவுந்தராஜன் எவ்வளவு காரசார ட்வீட்கள் போட்டாலும் அதனை முதிர்ச்சியோடு அணுகி பதில் சொல்லும் ஸ்டாலின், இன்று மூத்த தலைவர் டாக்டர் ராமதாஸை பார்த்து சூடு சொரணை இருக்கா, வெட்கம் இருக்கா என்று ஏன் இவ்வளவு தடித்த வார்த்தைகளை பயன்படுத்தினார்?
தடித்த வார்த்தைகள்
கோடிக்கணக்கான தொண்டர்கள் கட்சி தலைவரின் இந்த பேச்சை கேட்டால் என்ன நினைப்பார்கள்? ஒருவேளை பாமக திமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று ஸ்டாலின் நினைத்திருந்தாரா என தெரியவில்லை. கூட்டணி குறித்து பேசியது கருத்து சொல்வதாக ஒன்றும் தெரியவில்லை, ஏதோ பொறாமையில் ஸ்டாலின் கருத்து சொன்னதாகவே இருக்கிறது.
ராமதாஸ்
அது மட்டுமில்லை, ராமதாஸ் பற்றி எல்லோருக்குமே இத்தனை வருஷங்களாக நன்றாகவே தெரியும். யார் நிறைய சீட் தருவார்களோ அங்கு செல்வார் என்பதும், அதற்காக மாறி மாறி கூட்டணி வைக்க தயங்க மாட்டார் என்பதும் தமிழகம் நன்கு அறிந்ததுதான். ஏன் அதிமுக, திமுகவிடம் அவர் மாறி மாறி வந்தவர்தானே? அப்போதெல்லாம் கருணாநிதி அமைதியாக அதை ஏற்றுக் கொண்டார்தானே? ஆனால் இதெல்லாம் தெரிந்திருந்தும் ராமதாசை இவ்வளவு மோசமாக ஸ்டாலின் விமர்சித்திருப்பது ஆற்றாமையின் வெளிப்பாடாகவே தெரிகிறது!