இலவச மின்சாரத்திட்டத்திற்கு ஆபத்து... புதிய மின் திருத்தச்சட்டத்தை எதிர்க்கும் மு.க.ஸ்டாலின்
சென்னை: புதிய மின்சார திருத்தச் சட்டத்தை மாநில அரசுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சட்டம் விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை - நடுத்தர மக்களுக்கு நூறு யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கோயம்பேடு சந்தையில் இருந்து புதுவை திரும்பிய லாரி ஓட்டுநருக்கு கொரோனா
மின் திருத்தச்சட்டம்
கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சியாக, மாநில உரிமைகளை முழுமையாகப் பறிக்கும் விதத்திலும் - "பொதுப்பட்டியலில்" உள்ள "மின்சாரம்" தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே வைத்துக் கொள்ளும் உள்நோக்கத்துடனும் - "2020-ம் ஆண்டு புதிய மின்சார திருத்தச் சட்டத்தைக்" கொண்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேதனையளிக்கிறது
2014, 2018 ஆகிய ஆண்டுகளில் முயற்சி செய்து தோற்றுப் போன இந்தத் திருத்தச் சட்டத்தை, மாநிலங்கள் எல்லாம் கொரோனா நோய்த் தொற்று பேரிடரைச் சமாளிக்கும் "உயிர்காக்கும்" முயற்சியில் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், கொண்டு வந்து - கருத்துக் கேட்பது மிகுந்த கவலையளிக்கிறது. கொரோனாவிலிருந்து மனித உயிர்களைக் காக்கும் முயற்சிகள் குறித்தோ, நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியோ, கிஞ்சித்தும் கவலைப்படாமல் இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றிட மத்திய பா.ஜ.க. அரசு முனைவது வேதனையளிக்கிறது.
தேர்வுக் குழு
புதிய மின் திருத்தச் சட்டத்தில் - "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேசியக் கொள்கையை மத்திய அரசே வகுக்கும்" என்று கூறப்பட்டுள்ளது. மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களெல்லாம் இனி மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்குத் தலைவர், உறுப்பினர்களைக் கூட இனிமேல் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் "தேர்வுக் குழுவே" தேர்வு செய்யும்.
உதாரணத்திற்கு, முதல் தேர்வுக்குழுவில் ஆந்திரா மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலாளர்கள் இடம்பெறுவார்கள் என்றால் - அடுத்ததாக "T" பெயர் வரிசையில் வரும் தமிழ்நாடு இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு இந்த தேர்வுக்குழுவில் இடம்பெறவே முடியாது!
எள்ளி நகையாடும்
"மின் கொள்முதல், மின் விற்பனை, மின்சாரத்தை அனுப்புதல்" உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களை, இனிமேல் மத்திய அரசின்கீழ் அமைக்கப்படும் "மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம்" (Electricity Contract Enforcement Authority) ஒன்றே தீர்வு காணும் என்பதும் - மாநிலங்களுக்கு எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லாமல் இப்படியொரு ஆணையத்தை உருவாக்குவதும், மாநிலங்களிடம் இருக்கின்ற அதிகாரத்தையும் "எள்ளி நகையாடும்" போக்காகும்.
நழுவக்கூடாது
"உதய் திட்டத்திற்கு" அன்று அ.தி.மு.க. போட்ட கையெழுத்து, இன்றைக்கு "புதிய மின்சாரத் திருத்தச் சட்டம்" என்ற அடுத்தகட்ட ஆபத்தாக வந்திருக்கிறது. ஆகவே, மின்சாரத்தை "மத்திய அரசு மயமாக்கும்" இந்த கருப்புச் சட்டமான "புதிய மின்சார திருத்தச் சட்டம்" 2020-ஐ அ.தி.மு.க. அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அ.தி.மு.க. அரசு, காயம் ஏற்படாமல் தன்னைக் காத்துக்கொள்வதற்காக எப்போதும் செய்வதைப்போல் இப்போதும், "ஆமாம் சாமி" போட்டு நழுவிவிடக் கூடாது என்று நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.