மூட நம்பிக்கையால் 5 வயது மகனை எரித்துக் கொன்ற தந்தை.. வள்ளுவர் வரிகளுடன் ஸ்டாலின் வேதனை ட்வீட்
சென்னை: மூட நம்பிக்கையால் நன்னிலத்தில் 5 வயது மகனை தந்தையே எரித்துக் கொன்ற சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த ராம்கி - காயத்ரி தம்பதிக்கு சாய்சரண் என்ற 5 வயது மகனும் சர்வேஷ் என்ற மூன்று மாத ஆண் குழந்தையும் உள்ளது. ஆட்டோ ஓட்டி வரும் ராம்கி, வாழ்க்கையில் விரைவாக முன்னேற வேண்டும் என்று ஊர் ஊராக சுற்றி ஜோதிடம் பார்ப்பதை வாடிக்கையாகவே வைத்திருந்திருக்கிறார்.
அப்போது ஒரு ஜோதிடர், 'உங்களின் மூத்த மகன் உங்களுடன் இருக்கும் வரை முன்னேற்றம் ஏற்படாது' என்று கூற, ஜோதிடரின் பேச்சை முழுவதுமாக நம்பிய ராம்கி, தனது மகன் சாய் சரணை 15 ஆண்டுகள் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைக்கப் போவதாக மனைவி காயத்ரியிடம் தெரிவித்துள்ளார். இதற்கு காயத்ரி சம்மதிக்க மறுக்க குடும்பத்தில் தினம் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், மகன் என்றும் பாராமல் சிறுவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பை வைத்தார் ராம்கி. படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சாய்சரண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மூட நம்பிக்கையால் மகனை துடிக்க துடிக்க கொன்ற ராம்கியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் மன்னார்குடி தாண்டி தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "மகனால் ஆபத்து நேரலாம் என ஜோதிடர் கூறியதால், நன்னிலத்தில் தனது 5 வயது மகனை தந்தையே எரித்துக் கொன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, இனி நரபலிகளுக்கு இடம் தரக் கூடாது. மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவரின் வரிகளை என்றும் மனதில் கொள்வோம்" என்று ட்வீட் செய்துள்ளார்.