அதிமுகவின் "அடிமடியிலேயே" கை வைத்த ஸ்டாலின்.. எடப்பாடி பழனிச்சாமி நேர்மையானவரா.. அதிரடி தாக்கு
அதிமுக அமைச்சரவையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் ஸ்டாலின்
சென்னை: ஒருத்தரையுமே ஸ்டாலின் விடவில்லை.. முதல்வர் முதல் அனைத்து அமைச்சர்களையும் லிஸ்ட் போட்டு விமர்சித்துவிட்டார்.. அதிமுக அமைச்சரவையை மிகக் கடுமையாக குற்றம் சாட்டி அடிமடியிலேயே கை வைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
கரூர் மாவட்ட திமுக சார்பில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.. இதில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசிய பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. அதன் சுருக்கம் இதுதான்:
"மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிய கொடூரமான ஆட்சி என்றால், அது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியாகத் தான் இருக்கும்... கொரோனா கோடீஸ்வரர்கள் என்று புதிய வர்க்கமே அதிமுக ஆட்சியில் உருவாகிவிட்டார்கள்... அவர்களுக்கு மட்டும் தான் கொரோனா பயன்படுகிறது. இந்த அமைச்சரவையை அதனால்தான் நான் கடுமையாக குற்றம் சாட்டினேன்
விவசாயிகளை ஏமாற்றும் விஷ வாயுதான் எடப்பாடி... ஈடு இரக்கமற்றவர்... முக ஸ்டாலின் விளாசல்!!
முதல்வர்
அத்தகைய குற்றங்கள் அதிகம் ஆகியிருக்கிறதே தவிர குறையவில்லை... இன்றைக்கு முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது ரூ.3500 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கு இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது... சென்னை ஹைகோர்ட், இந்த புகாரை சிபிஐ விசாரிக்கலாம் என்று உத்தரவு போட்டது.
தடை
நேர்மையானவராக இருந்தால் பழனிசாமி புகாரை எதிர்கொண்டிருக்க வேண்டும்... ஆனால் அவசர அவசரமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று தடை வாங்கினார்... சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் மட்டும் தான் பழனிசாமி பதவியில் இருக்கிறார்... உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கினால் சிபிஐ வழக்கை பழனிசாமி எதிர்கொண்டாக வேண்டும்.
விசாரணை
துணை முதல்வர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த புகார் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திமுக சார்பில் தரப்பட்டது. அவர்கள் அதனை எடுத்து முறையான விசாரணை செய்யவே இல்லை. அதன்பிறகு நீதிமன்றம் போனோம். நீதிமன்றம் இதன் மீது விசாரணை நடத்துங்கள் என்று உத்தரவு போட்டார்கள். ஆனால் விசாரணையை முடக்கி வைத்துள்ளார்கள்.
அமைச்சரவை
உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியை ஊழலாட்சித் துறை அமைச்சர் என்று சொல்வேன். இந்த அமைச்சரவையில் அதிகம் சம்பாதித்த அமைச்சர்களில் முதலிடம் அவருக்குத் தான். பல்வேறு பினாமிகளின் மூலமாக டெண்டர்களை அவரே எடுத்து அரசாங்க கஜானாவை காலி செய்து கொண்டு இருக்கிறார். நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு என்று தங்கமணி மீது புகார் தந்து இருக்கிறோம்.
விஜயபாஸ்கர்
கொரோனாவை வைத்து ஊழல் செய்ய முடியும் என்பதை இந்தியாவுக்கே காட்டியவர் அமைச்சர் விஜயபாஸ்கர்தான்.. மருந்துகள் வாங்கியதில் ஊழல், கிட்ஸ் வாங்கியதில் ஊழல், தூய்மைப் பொருள்கள் வாங்கியதில் ஊழல் என்று மொத்தமும் ஊழல் மயம். கொரோனாவை விட கொடிய ஊழல் வைரஸ் கூட்டத்தை இந்த கோட்டையில் இருந்து விரட்ட வேண்டும்" என்று பேசினார்.
ஸ்டாலின்
ஸ்டாலினின் இந்த பேச்சு சோஷியல் மீடியாவில் விவாதங்களை கிளப்பி வருகிறது.. கருணாநிதி இறந்து இந்த 2 ஆண்டுகளில் ஸ்டாலின் இப்படி வீரியமிக்க பேச்சு பேசியதே இல்லை.. இவரது மேடை பேச்சுக்களை இதுவரை கிண்டல் செய்து வந்தவர்கள், நேற்றைய பேச்சை கண்டு மிரண்டு போயுள்ளனர்.
2ஜி வழக்கு
காரணம், ஊழல் குறித்த பேச்சாகவே இது முழுக்க முழுக்க அமைந்தது.. திமுக என்றாலே ஊழல் என்றுதான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.. இது 2ஜி வழக்கு விவகாரத்தில் இருந்தே இந்த பழியை திமுக சுமந்து வருகிறது.. நிரபராதிகள் என்று கோர்ட் விடுவித்தாலும், மேல்முறையீடு மனு, திமுகவுக்கு ஒரு பக்கம் கலக்கத்தை உள்ளுக்குள் தந்து கொண்டுதான் இருக்கிறது.
தீர்ப்பு
கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, விரைவில் 2ஜி வழக்கில் தீர்ப்பு வரப்போகிறது.. அதனால் 2 எம்பி தொகுதிகளில் தேர்தல் வரப்போகிறது என்று ஆரூடம் சொன்னார்.. பாஜக இந்த 2ஜி விவகாரத்தைதான் தூசி தட்டி திமுகவுக்கு எதிராக எடுத்து கொண்டு வருகிறது. இந்த அளவுக்கு திமுக நெருக்கடியில் உள்ளது என்றாலும், ஸ்டாலினின் தில் பேச்சு அதிமுகவை அதிர வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
சந்தேகம்
ஒருத்தரையுமே ஸ்டாலின் விடவில்லை.. முதல்வர் முதல் அனைத்து அமைச்சர்களையும் லிலஸ்ட் போட்டு விமர்சித்துவிட்டார்.. அநேகமாக வரப்போகிற பிரச்சாரங்களில் இவைகளையே வீதிவீதியாக பேசுவார் என்பதிலும் சந்தேகமில்லை.. ஒருவேளை ஸ்டாலின் குறிப்பிட்ட இந்த வழக்குகளும், அது சம்பந்தமான அனைத்துமே உண்மை என்றால், அதிமுக இதற்கு தன்னை தயார்படுத்தி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
ஊழல்
அனைத்து வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ளும் துரிதங்களையும் அது கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. எனினும், "ஊழல்" என்ற விவகாரத்தை திமுகவே கையில் எடுத்து, அதிமுகவின் அடிமடியில் கை வைத்துள்ளது உடன்பிறப்புகளுக்கு ஒரு புதிய தெம்பை தந்துள்ளது.