ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் சேருவதா? அமைச்சர்களுக்கு ஸ்டாலின் கண்டனம்
சென்னை: பொதுவிநியோகத் திட்டத்தை இழுத்து மூட வைக்கும் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் சேருவதற்கு தயார் என அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜூ கூறியுள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் சேருவதற்குத் தயார்' என்று டெல்லியில் நடைபெற்ற மத்திய உணவு அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில், தமிழக உணவு அமைச்சர் காமராஜ் சம்மதம் தெரிவித்து விட்டு வந்திருப்பதும், 'இந்தத் திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும்' என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்திருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் பாராட்டுதலைப் பெற்ற பொது விநியோகத் திட்டத்தை அடியோடு ஒழித்து - ஏழை எளிய நடுத்தரப் பிரிவினர் யாருக்கும் முறையாக அத்தியாவசியப் பொருட்கள், நியாயமான விலையில் கிடைத்து விடக்கூடாது என்ற மக்கள் விரோத நோக்கத்தை நிறைவேற்ற அ.தி.மு.க அரசு - மத்திய பா.ஜ.க. அரசுடன் வஞ்சகக் கூட்டணி வைத்து செயல்படுகிறது என்ற சந்தேகமே எழுகிறது.
குள்ளம் குள்ளம் என்று மீம் போட்டு கிண்டலடித்தார்கள்.. இப்போது பாருங்கள்.. உருக்கமாக பேசிய தமிழிசை!
முதலில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க அரசு, பிறகு திடீரென்று பல்டி அடித்து, 1.11.2016 முதல் அமல்படுத்தியது.
அதுவும், அன்றைய முதலமைச்சரான ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோதே வெளியில் இப்படியொரு முடிவை எடுத்து, தன்னிச்சையாகச் செயல்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து அச்சட்டத்தின்படியான மாநில உணவு ஆணையத்தை 16.2.2018 அன்று ஏற்படுத்தி - இன்றைக்கு தமிழகம் முழுவதிலும் உள்ள 35279 ரேசன் கடைகளில் அரிசியும் கிடைக்கவில்லை - பருப்பும் கிடைக்கவில்லை - ஏன் மண்ணெண்ணையும் கூட கிடைக்கவில்லை என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.
ரேசன் கடைக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கச் செல்லும் மக்களுக்கு 'இன்று போய் நாளை வா' என்று கூறி - ஏழை எளியவர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டுறவுத் துறையிலும், உணவுத் துறையிலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஊழலை கட்டுப்படுத்த முடியாமல் - அடையாளம் பிரித்துப் பார்க்க முடியாமல், அதனுடன் சங்கமித்துவிட்ட அமைச்சர்கள் இருவரும் மத்திய பா.ஜ.க. அரசு எடுக்கும் முடிவிற்கு எல்லாம் 'கைகட்டி', 'வாய் பொத்தி' ஆதரவுக் கரம் நீட்டி வருவது வேதனைக்குரியது.
தமிழகத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஐந்து வகை குடும்ப அட்டைகளுக்கே அத்தியாவசியப் பொருட்களைக் கொடுக்க முடியாமல் திணறும் அ.தி.மு.க அரசு, புதிதாக 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' என்ற திட்டத்தில் சேர்ந்து - தமிழ்நாட்டில் நீண்ட காலமாக உள்ள பொது விநியோகத்திட்டத்தையே இழுத்து மூடத் தயாராகி விட்டது.
தமிழகத்திற்கு உரிய மண்ணெண்ணை ஒதுக்கீட்டைக் கூடப் பெற வக்கில்லாத அ.தி.மு.க அரசு, இப்போது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ரேசன் பொருட்களையும் 'ஒரே நாடு ஒரே அட்டை' திட்டத்தில், மக்களுடைய இசைவைப் பெறாமல், இணைவதன் மூலம் தாரை வார்க்க முடிவு செய்திருக்கிறது.
குறிப்பாக, இதுகுறித்து சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசியபோது, "தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும்" என்று கூறி விட்டு, இப்போது "வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையும்" என்று உணவு அமைச்சர் கூறியிருப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.
அ.தி.மு.க ஆட்சியைப் பொறுத்தவரை அமைச்சர்களும், முதலமைச்சரும் சட்டமன்றத்தில் கொடுக்கும் வாக்குறுதி ஒன்று - ஆனால் அவர்கள் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடிபணிந்து வெளியில் செயல்படுவது வேறு ஒன்று என்பதையே இந்த 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
மாநில உரிமையை விட்டுக் கொடுத்து - மாநிலத்தில் உள்ள பொது விநியோகத் திட்டத்திற்கும் ஆபத்தை உருவாக்கும் வகையில் "ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை" திட்டத்தில் தமிழகம் நிச்சயமாக இணையக்கூடாது என்றும், அவ்வாறு ஒரு முடிவு எடுக்கும் முன்பு 1.99 கோடி கார்டு உரிமையாளர்களிடமும், சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் மூலம் ஜனநாயக ரீதியாகக் கருத்துக்களைக் கேட்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.