மா சுப்பிரமணியனின் மகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்
சென்னை: திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியனின் மகன் மா சு அன்பழகனின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இதுகுறித்து "கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பத்திரிகைச் செய்தி"
இன்று (19-10-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது புதல்வர் மா.சு.அன்பழகனின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
2021 சட்டசபை தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல.. தமிழர்களின் உரிமைகளை காக்கும் பெரும் போர்.. ஸ்டாலின்
முன்னதாக, மா.சு.அன்பழகன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாற்றுத்திறனாளியாக 35 ஆண்டுகளாக பெற்றோரால் பாதுகாக்கப்பட்டு அரவணைக்கப்பட்டு வந்த அன்பழகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
அது போல் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு திமுக சார்பில் இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. தேனி மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா என்ற மாற்றுத்திறனாளி திருவிழாவில் பலூன் விற்பனை செய்பவர். கொரோனா காலத்தில் அவரது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது குறித்து அவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்து உதவி கோரினார். தனக்கு ஒரு வாகனம் கிடைத்தால் அதன் மூலம் பல இடங்களுக்கு சென்று பலூன்களை விற்க முடியும் எனவும் கோரிக்கை விடுத்தார். தலைவரின் ஆணைக்கினங்க தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு. கம்பம் இராமகிருஷ்ணன், சுப்பையாவிற்கு புதிய இரு சக்கர வாகனம் ஒன்றை இன்று வழங்கினார்.