சமூகநீதியின் தூண் சாய்ந்துவிட்டது... ஒடுக்கப்பட்டோருக்காக ஒலித்தக் குரல் ஓய்ந்துவிட்டது -ஸ்டாலின்
சென்னை: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூகநீதியின் தூண் ஒன்று சாய்ந்துவிட்டதாகவும் ஒடுக்கப்பட்டோருக்காக ஒலித்தக் குரல் ஓய்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;
தமிழகத்திற்கு என்ன செய்தார் ராம்விலாஸ் பாஸ்வான்..? தயக்கமோ.. தாமதமோமின்றி.. தாராளம் காட்டியவர்..!
அதிர்ச்சி
மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தியின் நிறுவனரும், வாழ்நாளெல்லாம் சமூகநீதிப் போராளியாகத் திகழ்ந்தவருமான திரு. ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு பெருந்துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேசம் பாராட்டியவர்
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் - சமூகநீதிக் களத்தில் - நெருங்கிய நட்பு பாராட்டி வந்த திரு. ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் உற்ற நண்பர் மட்டுமின்றி - அவர் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் கொண்டவர். அதேபோல் என்னிடமும் மிகுந்த நெருக்கம் காட்டி - நேசம் பாராட்டியவர். ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்ததற்காக நெருக்கடி நிலைமையின் போது சிறையில் அடைக்கப்பட்டாலும் - நெஞ்சுரத்துடன் முழுக் காலத்தையும் சிறையில் கழித்த தியாக சீலர்.
சென்னை வந்தார்
மத்திய அமைச்சராகப் பணியாற்றிய காலங்களில் எல்லாம் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை அறிவித்தவர். 2012-ல் சென்னையில் நடைபெற்ற - ஈழத்தமிழர்களின் நலனுக்கான "டெசோ ஆய்வரங்கத்தில்" கலைஞர் அவர்களின் அருகில் அமர்ந்து - அப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஆழ்ந்த ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டவர்.
உரிமைக்குரல்
திரு. ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள் விரைவில் வீடு திரும்பி - சமூகநீதிக்காகவும் - அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைக் குரலாகவும் விளங்கி, தொடர்ந்து முன்னெப்போதும் போல் பாடுபடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் - அவர் மறைந்தார் என்று வந்த செய்தி பேரிடியாக என் இதயத்தைத் தாக்கியிருக்கிறது.
சாதித்து காட்டுவோம்
"சமூகநீதியின்" உறுதிமிக்க தூண் ஒன்று இன்று சாய்ந்து விட்டது. அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒலித்துக் கொண்டிருந்த உயர்வான குரல் ஓய்ந்து விட்டது. தமிழ்நாட்டின் நலன்களுக்கு என்றும் தயங்காமல் முன்னுரிமை கொடுத்து வந்த ஒரு மத்திய அமைச்சரை நாம் இழந்து விட்டோம். ஆனால் அவர் ஏற்றி வைத்துப் பாதுகாத்து வந்த சமூகநீதி தீபம் என்றைக்கும் அணையாது - இந்தியத் திருநாடு முழுவதும் ஒளி வீச வைத்திட நாம் அனைவரும் சபதமேற்போம்; அவர் வழிநின்று சாதித்துக் காட்டுவோம்!