சட்டசபை தேர்தல் வியூகம்.. நேரில் வந்த 8 மாவட்ட நிர்வாகிகள்.. ஸ்டாலின் எழுப்பிய பரபர கேள்விகள்
சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மண்டல வாரியாக நிர்வாகிகளை அழைத்து, வெற்றிக்கு எப்படி பணியாற்றவேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருகிறார். அந்த வகையில் வடக்கு மண்டலத்தை சேர்ந்த 8 மாவட்ட நிர்வாகிகளை நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த முறை சட்டசபை தேர்தல் இதுவரை இல்லாத ஒரு புதிய தலைமைகளின் நடைபெற போகும் தேர்தல் ஆகும். கடந்த 35 ஆண்டுகளாக மாறி மாறி முதல்வர்களாக இருந்து வந்த ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாமல் நடைபெறும் தேர்தல் ஆகும்
அதிமுகவிற்கும் எடப்பாடி பழனிச்சாமியும், திமுகவுக்கு முக ஸ்டாலினும் தலைமையேற்று சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் உள்ள நிலையில் இந்த முறையும் வெற்றி பெற பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
திமுகவிற்கு எதிராக பிரச்சாரம்
இதேபோல் இந்த முறை அதிமுகவிற்கு மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவும் முழு ஆதரவு அளித்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சியாக உள்ள கூட்டணி எதிர்ப்பது என்பது திமுகவுக்கு பெரும் சவாலாகும். இது ஒருபுறம் எனில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு திமுகவை, பாஜக கடுமையாக தாக்கி அரசியல் செய்து வருகிறது,
நிர்வாகிகளை அழைத்து பேச்சு
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் மண்டல அளவில் நிர்வாகிகளை நேரில் அழைத்து ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளார். முன்னதாக . கொரோனா பரவல் காரணமாக காணொளி காட்சி மூலம் நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிவந்தார். இப்போது ஓரளவு கொரோனா குறைந்த நிலையல் அவர்களை நேரில் சந்தித்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி வியூகங்களை வகுப்பது குறித்து ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளார்.
வடக்கு மண்டலம்
அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை வடக்கு மண்டலத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.. அதை தொடர்ந்து மாலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மூத்த தலைவர்களும் பங்கேற்பு
மிக முக்கியமான இந்த ஆலோசனை கூட்டத்தில் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
மக்களின் மனநிலை என்ன
இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனைகளை ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு வழங்கினார். தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம், தொகுதி கள நிலவரம் என்ன?. தற்போதைய எம்எல்ஏக்களின் செயல்பாடு எவ்வாறு உள்ளது?. மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது அதிமுக அரசை மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
ஸ்டாலின் கொடுத்த ஆலோசனை
எதெல்லாம் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்பது குறித்தும் கேட்டறிந்தார். திமுகவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளின் விபரங்களையும் அவர் கேட்டதாக கூறப்படுகிறது. இப்படி பல்வேறு கேள்விகளை கேட்ட ஸ்டாலின், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று நிர்வாகிகளை அறிவுறுத்தினார். அதிமுகவின் மக்கள் நலனுக்கு எதிரான சட்டங்கள், மாணவர்களுக்கு எதிராக அதிமுக அரசு செய்து வரும் துரோகங்கள் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.