12 மணியோடு டாஸ்மாக் குளோஸ்.. குடிகாரர்கள் சோகம்.. மற்ற எல்லோருக்கும் "சியர்ஸ்" குளிர்வித்த ஸ்டாலின்!
சென்னை: டாஸ்மாக் கடைகளும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்று பதவியேற்பதற்கு முன்பே ஸ்டாலின் "அறிவித்துள்ளதை" மற்ற கடைக்காரர்கள் வரவேற்கிறார்கள்.
கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையின் போது இந்தியா முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தமிழகத்திலும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், பின்னர் ஊரடங்கில் தளர்வுகளின் போது மீண்டும் திறக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள் திறந்தால் கொரோனா வந்துவிடும். ஆனால் டாஸ்மாக் கடைகளை திறந்தால் கொரோனா வராதா என்ற கேள்வியெல்லாம் எழுந்தது.
"சிஎம் ஸ்டாலின்".. லாக்டவுன் போடுங்க. ரூ.4000 கொடுங்க".. விசிக கோரிக்கையால்.. எகிறும் எதிர்பார்ப்பு
வருமானம்
ஆனாலும் அரசுக்கு பெரும்பாலும் டாஸ்மாக்கில் இருந்து வருமானம் செல்வதால் அதிமுக அரசு எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக்கை திறந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை கடுமையாக வீசி வருகிறது. இந்த தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே பலசரக்கு கடைகள், காய்கறி, மளிகை கடைகள் உள்ளிட்டவை இரவு 9 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது.
சலூன்கள்
அது போல் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட இடங்களில் உள்ள சலூன்கள், ஸ்பாக்கள், அழகு நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டது. உடற்பயிற்சி கூடங்களையும் மூட உத்தரவிட்டதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இந்த தொழிலையே நம்பி பிழைப்பு நடத்தி வரும் இவர்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானார்கள்.
டாஸ்மாக் கடைகள்
மேலும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு பதிலாக நேரத்தை மட்டும் குறைந்திருந்தார்கள். டாஸ்மாக் கடைகளில் பரவாத கொரோனா சலூன்களில் எப்படி பரவும் என அந்த கடைக்காரர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் இன்றிலிருந்து காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணியுடன் மூட வேண்டும் என இரு தினங்களுக்கு முன்னர் சுகாதாரத் துறை உத்தரவிட்டது.
துவண்ட கடைக்காரர்கள்
இதனால் மேற்கண்ட கடைகளை வைத்திருப்போர் துவண்டு போயினர். டாஸ்மாக் கடைகளுக்கெல்லாம் எந்த அறிவிப்பையும் தராமல் நம் கடைகளுக்கு மட்டும் தருகிறார்களே என மனதிற்கு விம்மினார்கள். இந்த நிலையில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதற்கு முன்பே கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகளுக்கு நேர கட்டுப்பாடு
இந்த நிலையில் நேற்றைய தினம் டாஸ்மாக் கடைகளும் நண்பகல் 12 மணியுடன்தான் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறை உத்தரவிட்டிருந்தார். ஸ்டாலின் பதவியேற்காததால் அவருடன் ஆலோசனை செய்யப்பட்டே சுகாதாரத் துறை இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது நன்றாகவே தெரிகிறது.
குடிமகன்கள்
டாஸ்மாக் கடைகளுக்கு வரும் குடிமகன்கள் கடைக்கு வரும் போது மாஸ்க் அணிந்து கொண்டும் கடையிலோ அல்லது பக்கத்தில் உள்ள இடங்களிலோ குடித்து விட்டு செல்லும் அவர்களது வேட்டியை போல் மாஸ்க்கும் எங்கே கிடக்கும் என்பது அவர்களுக்கே தெரியாது. மேலும் சமூக இடைவெளியும் கேள்விக்குறியாகியுள்ளது.
உத்தரவு
டாஸ்மாக் கடைகளால்தான் கொரோனா அதிகம் பரவும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் வருமானம் தரும் அக்கடையை மூடாமல் சலூன் கடை, காய்கறி கடை, மளிகைக் கடை, பாத்திரக் கடை உள்ளிட்டவைகளை மட்டும் மூட உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது டாஸ்மாக்கிற்கு அதே விதிகள் பொருந்தும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.