பாஜகவுக்கு அந்த பயம் இருக்கட்டும்.. மரணித்த பிறகும் மருள வைத்த பெரியார்.. ஸ்டாலின்
சென்னை: பாஜகவுக்கு அந்த பயம் இருக்கட்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 46 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தின.
இந்த நிலையில் பெரியாரை கடுமையாக விமர்சித்து தமிழக பாஜக ஒரு ட்விட் போட்டது. இதற்கு கடும் எதிர்ப்ப நிலவியதை அடுத்து அந்த ட்வீட்டை பாஜக நீக்கிவிட்டது.
பிளாஸ்பேக் 2019: 2019ல் பிரதமர் மோடி- அமித்ஷாவின் சாதனைகள்.. கண்ணில் முள்ளாக தைத்த ஒரு விஷயம்!
|
முன்பே யோசித்திருக்கலாம்
இது குறித்து ஸ்டாலின் கூறுகையில் #Periyar ஐ இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது @BJP4TamilNadu. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே?
மண்புழுவாய் பதுங்குமா
பாஜகவுக்கு அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாலின் மரியாதை
முன்னதாக பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜாவும் பெரியாரை விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார். முதலில் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஈரோட்டுப் பூகம்பம் என முத்தமிழறிஞரால் போற்றிய அறிவாசான் தனது அறிவுப்பயணத்தை நிறுத்தி அரைநூற்றாண்டு ஆனது.
பயணம் தொடரும்
ஆனாலும் அது வெடித்துக்கொண்டே தான் இருக்கிறது. தமிழினம் உணர்வு பெற அந்த வெப்பம் மேலும் பல நூற்றாண்டுகளுக்குத் தேவை! அவரது பாடங்கள் கைகாட்ட நமது பயணம் தொடரும்! வாழ்க #periyar! என தெரிவித்திருந்தார்.
எச் ராஜா கடும் விமர்சனம்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எச் ராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் ஈவேரா பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவு தந்தார். அதேபோல லண்டனில் இருந்து கொண்டாவது சென்னை ராஜதானியை ஆளவேண்டும் என்று தீர்மானம் போட்டார். ஆகவே இந்த நாட்டில் அமைதிக்கு விரோதமாக இருப்பது "டெரரிஸ்ட்களும் பெரியாரிஸ்ட்களும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.