தாகத்தில் தமிழகம்.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் பதில் இல்லை.. ஸ்டாலின் கடும் சாடல்
சென்னை: சென்னையில் தண்ணீர் இல்லாத அவலநிலைக்கு காரணம் என்ன என்பதற்கான உரிய பதில் ஊழலில் நீந்தும் உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்
தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வறட்சி ஏற்பட்டது. இந்த நிலையில் கோடை காலத்தில் மழை ஏதும் பெய்யாததாலும் ஃபனி புயல் ஒடிஸா பக்கம் திரும்பியதாலும் கடும் வெப்பத்தில் சிக்கி தவிக்கிறது தமிழகம்.
இந்த நிலையில் தண்ணீர் இல்லாமல் பல உணவகங்கள் மூடுவதற்கு உத்தேசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
வெப்பநிலை
சென்னையில் தண்ணீரை தேடி மக்கள் பகல், இரவு பாராமல் அலைந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் ஒரு வாரத்துக்கு 106 டிகிரி வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடும் வறட்சி
சென்னை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை கோடை மழை ஒருமுறை கூட பெய்யாமல் இருந்ததாக வரலாறு இல்லை என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஸ்டாலின் பதிவு
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுகிறது. அதுமட்டுமல்ல ஐ.டி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்? இதற்கெல்லாம் "ஊழலில்" நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை.
பணி
நான் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை ஏற்று கழகத்தினர் ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்வதாக வருவது ஆறுதலாக இருந்தாலும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை தங்களால் மேலும் இயன்றவரை முனைப்புடன் நிறைவேற்றிட வேண்டும் என கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டு கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.