சப்பைக்கட்டு கட்டாதீர்கள்... மின் கட்டணம் என்ற பெயரில் மக்களுக்கு 'எலக்ட்ரிக் ஷாக்' -மு.க.ஸ்டாலின்
சென்னை: மின் கட்டணம் என்ற பெயரில் மக்களுக்கு 'எலக்ட்ரிக் ஷாக்' கொடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதயத்தில் ஈரம் இருந்தால், மின்கட்டணம் குறித்த சலுகைகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது எளிதானதே என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திமுகவை ஆக்கிரமித்தவர்.... விக் வைத்து அருவறுப்பு அரசியல்.. ஸ்டாலின் மீது வேலுமணி சரமாரி பாய்ச்சல்
மின்கட்டணம்
"மின்சாரச் சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின் போது முந்தைய மின் கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது" என்று அ.தி.மு.க. அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து- மின் நுகர்வோரின் துயரத்தை உணர மறுப்பதற்கு மிகுந்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொடுமை
முந்தைய மாதத்தில் செலுத்திய கட்டணத்திற்குரிய "யூனிட்களை" கழிக்காமல்"- செலுத்திய பணத்தை மட்டும் கழிப்பதால்தான் இந்தக் "கட்டண உயர்வுப் பிரச்சினை" என்பதை இன்னும் மின்துறை அமைச்சர் திரு. தங்கமணியோ அல்லது முதலமைச்சர் திரு. பழனிசாமியோ உணராமல் இருப்பது கொரோனா ஊரடங்கை விட மிகக் கொடுமையாக இருக்கிறது.
மக்கள் தவிப்பு
ஊரடங்கைப் பிறப்பித்தது அரசு. அது 'பேரிடர் நிர்வாகத்தின்' கீழ் கொரோனாவை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசின் நடவடிக்கை. ஆகவே அந்த காலகட்டத்தில் வேலை இல்லை; சம்பளமும் இல்லை. கூலி வேலை செய்வோர் கூட தினசரி உணவிற்கு வழியின்றி தவித்தார்கள். அடிப்படை வாழ்வாதாரத்திற்கே பணமின்றி - வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போனார்கள். சுலப வகையிலும் வருமானம் ஏதுமின்றி - வாழ்வாதாரத்தை இழந்து தவிப்போரிடம் அ.தி.மு.க. அரசு ஏன் மனமிறங்க மறுக்கிறது?
வாழ்வாதாரம்
பேரிடரைக் காரணம் காட்டி டெண்டர் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கொள்முதல் செய்ய முடிகிற அரசுக்கு - அதையே காரணம் காட்டி கட்டணத்தை ஏன் குறைக்க முடியவில்லை? வயிற்றுப் பிழைப்பிற்காக வீதிக்கு வரும் மக்களை அடித்துத் துரத்த ஊரடங்கைப் பயன்படுத்திய அரசு - அந்த மக்களின் வாழ்வாதாரம் நொறுங்கிப் போனதை ஏன் உணர மறுக்கிறது?
ஏற்க முடியாது
"ஊரடங்கால் நுகர்வோர் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தி விட்டதாக" ஒரு 'சப்பைக்கட்டு' வாதத்தை அமைச்சரும், அ.தி.மு.க. அரசும் மீண்டும் மீண்டும் கூறி மக்களைக் கேவலப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து மக்களும் வீட்டிற்குள் முடங்கியதற்கு அரசு பிறப்பித்த ஊரடங்குதான் காரணமே தவிர; பிழைப்புத் தேடி வெளியில் செல்லத் தயாராக இருந்த மக்கள் அல்ல!
தார்மீக பொறுப்பு
ஆகவே அரசின் உத்தரவால், முடங்கிப் போன மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அ.தி.மு.க. அரசுக்குத்தான் இருக்கிறது. 'நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என்று அமைச்சரும், முதலமைச்சரும் அரசு வழக்கறிஞர் மூலம் உயர்நீதிமன்றத்தின் முன்பு வாதிட்டு, அப்பாவி மக்களை மேலும் நெருக்கடியில் தள்ளுவது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல; குடிமக்களிடம் காட்டும் பொல்லாத செயல்!
சலுகை வழங்கலாம்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமே மின்சாரச் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட அமைப்பு என்பதாலும், இது கொரோனா பேரிடர் காலம் என்பதாலும், கட்டணச் சலுகையை மின் நுகர்வோருக்குக் கொடுப்பதில் அ.தி.மு.க. அரசுக்கு எவ்வித தடையும் இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை விட, முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு இதயத்தில் ஈரம் இருந்தால், இந்த சலுகையைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது எளிதானதே என்று நம்புகிறேன்.