முதல்வர் வெளிநாடு போகட்டும்.. வேணாம்னு சொல்லல.. ஆனா ஏன் போறார்னு தெரியுமா.. ஸ்டாலின் திடீர் விளக்கம்
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஸ்டாலின் விமர்சித்துள்ளார்
Recommended Video
சென்னை: "முதல்வர் வெளிநாட்டுக்கு போகட்டும்.. வேணாம்னு சொல்லல.. ஆனால் முதலீடுகள் நாட்டுக்காக, முதல்வருக்கா..ன்னுதான் தெரியல" என்று முதல்வர் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகளை கவர அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடியாரும் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். வரும் 28ஆம் தேதி இங்கிருந்து பயணம் மேகொள்ளும் முதல்வர், செப்டம்பர் 7-ம் தேதிதான் திரும்பி வருகிறார்.
வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழக தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு கோரிக்கை வைப்பதற்காக முதல்வர் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. அதனால்தான் அமெரிக்காவில் போய் வெற்றிக்கொடி நாட்டுவார் என்று ஏற்கனவே ராஜேந்திரபாலாஜி சொல்லிவிட்டார்.
ஆனால் இப்பொழுதெல்லாம் ஸ்டாலின் ஒரே ஹாட் பேச்சு.. முதல்வரின் அமெரிக்கா பயணத்தால்தான். எங்கு போனாலும், எதை பற்றி பேசினாலும் முதல்வரை பற்றியே அதிகமாக விமர்சித்து வருகிறார். நீலகிரி வெள்ளத்தைகூட பார்க்க முடியாத அவளவுக்கு முதல்வர் பிஸியாக இருக்கிறார் என்று ஏற்கனவே சொல்லி இருந்தார். இந்த நிலையில் முதல்வரின் சுற்றுப் பயணத்தை திரும்பவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் ஒரு கல்யாண வீட்டில் பேசிய ஸ்டாலின், "தமிழகத்தில் 8 வருடங்களாக அதிமுகதான் ஆட்சியில் இருந்துவருகிறது. அதிமுக ஆட்சி நடக்கிறதா அல்லது இல்லையா என்பது வேறு விஷயம். அதிமுக ஆட்சி நடப்பதற்கு காரணமே திமுகதான்.
நாம்தாம் ஒவ்வொரு பிரச்சினைகளையும் பேசுகிறோம். அதனால் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றக் கூடிய கட்சி திமுகதான். இந்த லட்சணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளிநாடு செல்கிறாராம்.
பிரதமர் மோடி ஒவ்வொரு நாடாக போய்வந்தார். இப்ப எடப்பாடி பழனிசாமி அந்த வேலையை ஆரம்பித்துவிட்டார். வெளிநாடு போகட்டும்.. நான் வேணாம்னு சொல்லல.. குறையும் சொல்லல.. முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு போறதா சொல்றாங்களாம்.. ஆனா அது யார் முதலீடு? முதலீடுகள் நாட்டுக்கா இல்லை, எடப்பாடி பழனிசாமிக்கான்னுதான் தெரியல" என்றார்.