தேர்வில் வெற்றி பெற்றும்.. மாற்றுத்திறனாளி பூரணசுந்தரிக்கு ஐஏஎஸ் பணி வழங்க மறுப்பதா- ஸ்டாலின் கேள்வி
சென்னை: மதுரையைச் சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளி, பூரண சுந்தரிக்கு, ஐஏஎஸ் பணி வழங்க வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (24-10-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:
குடிமைப் பணித் தேர்வில், தனது அயராத முயற்சியால் வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த செல்வி. பூரணசுந்தரி அவர்களுக்கு ஓ.பி.சி பிரிவின் அடிப்படையிலும் மாற்றுத்திறனாளிக்குரிய பணியிடத்தின் அடிப்படையிலும் ஐ.ஏ.எஸ். பணியை வழங்காமல் ஐ.ஆர்.எஸ். பணி வழங்கப்பட்டிருப்பது, இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது. இதுகுறித்து அவர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளார்.
ஏற்கனவே கேரள மாநில கேடரில் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத் திறனாளி பெண்மணிக்கு ஐ.ஏ.எஸ். பணி வழங்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் பூரணசுந்தரி அவர்களுக்கும் ஐ.ஏ.ஸ். பணி வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துகிறேன். பூரணசுந்தரி அவர்களின் முயற்சிகளுக்கு தி.மு.கழகம் துணை நிற்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், மதுரை உட்பட பல மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
மதுரை மணிநகரத்தைச் சேர்ந்தவர் பூரணசுந்தரி. பார்வை மாற்றுத்திறனாளியாகும். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அகில இந்திய அளவில் 286ஆவது இடம் பெற்றுள்ளார். பூரணசுந்தரி கடந்த 2019ஆம் ஆண்டு நான்காவது முறையாக தேர்வெழுதி வெற்றி பெற்றார். பூரணசுந்தரிக்கு இந்திய வருவாய்ப் பணி (ஐஆர்எஸ்) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தனக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் பூர்ணசுந்தரி மனுத் தாக்கல் செய்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.