பாஜகவின் பாதுகாப்பு வளையத்திற்குள் முதல்வர்... விவசாயிகளிடம் மன்னிப்பு கோருக - ஸ்டாலின் பாய்ச்சல்
சென்னை: விவசாயிகள் விரோத சட்டத்துக்கு ஆதரவு அளித்ததற்காக விவசாய பெருமக்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கோர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவின் பாதுகாப்பு வளையத்திற்குள் இப்போது வேண்டுமானால் இருக்கலாம் என்றும் தேர்தலின் போது மக்கள் தரும் தண்டனையில் இருந்து தப்பவே முடியாது எனவும் விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
வழக்குப் போட வேண்டுமென்றால் அனைவர் மீதும் போட வேண்டும்... அதிமுக மீது பாயும் எல்.முருகன்..!
மிக மோசம்
"விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு - அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி" ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும்.
4 கட்சிகள் ஆதரவு
பா.ஜ.க.,வின் விவசாயிகள் விரோத மசோதாக்களை, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களும், பா.ஜ.க.,வின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி - வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 13 கட்சிகள் அந்த மசோதாக்களை எதிர்க்கின்றன; அ.தி.மு.க. உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டும் ஆதரிக்கின்றன.
பார்க்கத் தவறிவிட்டீரா?
"விவசாயிகளுக்கு நிரந்தரக் கணக்கு எண் தேவையில்லை" என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால் மேற்கண்ட சட்டத்தில் "நிரந்தரக் கணக்கு எண் வைத்துள்ள எந்த நபரும்" (Any person) என்றுதான் இருக்கிறதே தவிர, முதலமைச்சர் சொல்வது போல் "விவசாயிக்கு - அல்லது விவசாய அமைப்புக்கு நிரந்தரக் கணக்கு எண் தேவையில்லை" என்று கூறவில்லை என்பதை பாவம் - முதலமைச்சர் பார்க்கத் தவறி விட்டாரா அல்லது பார்த்ததை மறைக்க முயற்சி செய்கிறாரா?
வரலாறு மன்னிக்காது
விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்து - உச்சநீதிமன்றத்திற்கே சென்று தடை பெற்றவர், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளின் நிலங்களைப் பறித்திடத் தீவிரம் காட்டுபவர், ‘பி.எம். கிசான்' திட்டத்தில் 6 லட்சம் போலிகளைச் சேர்த்து, விவசாயிகள் வயிற்றில் அடித்தவர் - இன்றைக்கு விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் மூன்று சட்டங்களையும் ஆதரித்து விட்டு - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் - விவசாயிகள் விரோத மத்திய பா.ஜ.க. அரசுக்கும் சாமரம் வீசுவதையும்; தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதையும்; வரலாறு மன்னிக்காது.
மக்கள் தண்டனை
இன்னும் ஆறு மாதங்களுக்கு வேண்டுமென்றால் ஊழல் வழக்குகளில் இருந்து "பா.ஜ.க.,வின் பாதுகாப்பு" வளையத்திற்குள் நின்று தப்பித்துக் கொள்ள உதவலாம்; அதன் பிறகு மக்கள் எனும் மகேசன் தரப் போகும் தண்டனையிலிருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது. முதலமைச்சரின் நேற்றைய 6 பக்க "ஆதரவு அறிக்கையை" நிராகரிக்கும் வகையில் - இன்றைக்கு மூத்த அரசியல் தலைவரும், அ.தி.மு.க.,வின் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் அவர்கள் இந்த வேளாண் சட்டங்களைக் கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார்.
ஒப்புதல் வாக்கு
"மக்களவையில் ஆதரவு" "மாநிலங்களவையில் எதிர்ப்பு" என்ற அ.தி.மு.க.,வின் நகைச்சுவைக்குப் பிறகு - இப்போது முதலமைச்சரின் முன்பு இருப்பது ஒரேயொரு வழி! ‘என்னையும், எனது அமைச்சர்களையும் பாதுகாத்துக் கொள்ள உங்களைப் பலிபீடத்தில் ஏற்ற முயற்சி செய்து பார்த்தேன்" என்று, "ஒப்புதல் வாக்குமூலம்" அளித்து - விவசாயப் பெருமக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள்! அதுதான் நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகு! தற்காலிகப் பாதுகாப்புக் கவசம்.