தமிழகத்திற்கு புதிய பட்ஜெட் தேவை... ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட்ஜெட் உருவிழந்துவிட்டது -மு.க.ஸ்டாலின்
சென்னை: 2020-2021 ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை கொரோனா பேரிடரால் உருவிழந்துள்ளதால் புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டு புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஹிமாச்சல் ரெஜிமெண்ட்டை உருவாக்குகிறதா இந்திய ராணுவம்? பொய்ச் செய்தி
வேடிக்கையாக உள்ளது
கொரோனா பேரிடரால் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் பின்னடைவுகளால் தமிழக நிநி நிலை அறிக்கை முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டிய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் நிதி நிலைமை இருக்கிறது என்பதை அ.தி.மு.க. அரசோ, அதன் நிதியமைச்சரோ, முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியோ இன்னும் புரிந்து கொள்ளாதது கவலையளிக்கிறது; வேடிக்கையாகவும் இருக்கிறது.
வரலாறு காணாத கடன்
வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, வரலாறு காணாத கடன்" ஆகியவற்றின் கடும் பிடியில் மாநிலத்தை அ.தி.மு.க. அரசு சிக்க வைத்திருந்ததால், தற்போதைய கொரோனா - அதை மேலும் சிக்கலாக்கி - நிதிப் பேரிடரை உருவாக்கி, தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. இழந்த வரி வருவாயும் - சீரழிந்த நிதிநிலைமையும் மேலும் கவலைக்கிடமாகி - நிதிநிலை அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும் "உயிர் பிழைக்குமா, இல்லையா" என்ற நிலையில் இன்றைக்கு "அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.)இருக்கிறது.
வேலை இழப்பு
தமிழ்நாட்டின் முதுகெலும்பான விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளும் - விவசாயத் தொழிலாளர்களும் அனைத்து வருவாயையும் இழந்து வெறுங்கையராய் இருக்கிறார்கள். மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 22.21 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 60 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடந்ததால், 1.42 கோடி தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டார்கள்
ரங்கராஜன் குழு
"கொரோனா ஊரடங்கால்" ஏற்பட்ட "மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் செலவினங்கள் முழுவதையும் மாற்றி அமைப்பது" உள்ளிட்ட விசாரணை வரம்புகளுடன், ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர் சி.ரங்கராஜன் அவர்கள் தலைமையில் மே 9-ம் தேதி ஓர் உயர்மட்டக் குழுவினை அ.தி.மு.க. அரசு அமைத்திருக்கிறது என்றாலும், அந்த உயர்மட்டக் குழுவிடம் "இடைக்கால அறிக்கை" எதையும் அ.தி.மு.க. அரசு கோரவில்லை.