அமைச்சரவைக் கூட்டத்தில் இதை விவாதிக்கவும்... நகைகடன் ரத்து உட்பட மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் பட்டியல்
சென்னை: இன்று மாலை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவசாய கடன், நகைகடன் ரத்து உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளில் ஈடுபட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதைவிடுத்து மற்ற திட்டச்செயலாக்கத்திற்கான நிதி ஒதுக்கீடு, டெண்டர் வெளியீடு பற்றி விவாதிப்பதை அமைச்சரவைக் கூட்டம் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்... 4 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை
ஏழை எளிய மக்கள்
ஊரடங்கின் கோரப்பிடியில் சிக்கிய அடித்தட்டு மக்கள்- ஏழை எளியவர்கள் எவ்வித வருமானமும் இன்றி, தேவைப்படும் எதையும் வாங்கும் சக்தியை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் பொருளாதாரமே நொறுங்கி- பணப் புழக்கத்தில் கடும் தேக்க நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் உற்ற துணையாக இல்லை.
கொத்து கொத்தாக
திட்டமிடப்படாத "ஊரடங்கு" அறிவிப்பால்- மாவட்டங்களில் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால்- இன்றைக்குத் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கொரோனா "கொத்துக் கொத்தாக" பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆகவே மாவட்டங்களில் வாழ்வாதாரப் பிரச்சினை அச்சமூட்டும் வடிவம் எடுத்து- வருமான இழப்பு வரலாறு காணாத வகையில் ஏற்பட்டிருக்கிறது.
நகைக்கடன் ரத்து
இப்படியொரு நெருக்கடியான சூழலில் இன்று கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி வழங்குவது, கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள அனைத்து நகைக்கடன்களையும் ரத்து செய்வது, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வது- கொரோனா காலத்திற்கு வீட்டுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தில் சலுகை அறிவிப்பது, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும்- தொழில் நிறுவனங்களுக்கும் மின்கட்டண சலுகை அளிப்பது, மாணவர்களின் அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்வது ஆகியவற்றைப் பரிசீலித்து மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் தமிழக அமைச்சரவையில் ஆக்கபூர்வமான முடிவெடுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.
நல்ல முடிவு எடுங்கள்
இவற்றைத் தவிர, மற்ற திட்டச் செயலாக்கத்திற்கான நிதி ஒதுக்கீடு, டெண்டர் வெளியீடு, சமூகத்தைப் பாதிக்கும் திட்டங்களில் ஈடுபாடு ஆகியவை குறித்து நெருக்கடியான இந்த கால கட்டத்தில் விவாதிப்பதைத் தவிர்த்திடுதல் நன்று. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட வேண்டிய தலையாய பொறுப்பு அரசுக்குள்ளது என்பதை உணர்ந்து அமைச்சரவைக் கூட்டத்தில் நல்லதொரு முடிவினை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.