அறிவாலயத்தில் சிலுப்பிய வீரபாண்டி ராஜா... மடக்கிய கே.என். நேரு
சென்னை: சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டதால் வீரபாண்டி ராஜா சிலுப்பிய நிலையில் ஸ்டாலினை சந்திக்க அண்ணா அறிவாலயம் வந்திருந்தார்.
வழக்கமாக அணியும் திமுக கரைவேட்டியையும், வெள்ளை சட்டையையும் தவிர்த்து டீ ஷர்ட் அணிந்தவாறு வீரபாண்டி ராஜா அறிவாலயத்திற்கு வந்ததை பார்த்த நிர்வாகிகள், தலைவரை பார்க்க வரும் போது கூட இப்படியா வர வேண்டும் என கமெண்ட் அடித்தனர்.
இதனிடையே வீரபாண்டி ராஜா ஸ்டாலினை சந்திக்க அண்ணா அறிவாலயம் வருவதற்கு முன்பு, அவரது ஆதரவாளர்கள் சேலத்தில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
வீரபாண்டி ராஜாவை டம்மியாக்கிய ஸ்டாலின்... பின்னணி காரணம் என்ன?
ஏமாற்றம்
கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்ப பிடியில் இருந்து சேலம் மாவட்ட திமுக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்டாலினால் பறிக்கப்பட்டது. இதனை ஜீரணிக்க முடியாத வீரபாண்டியார் ஆதரவாளர்கள் தீக்குளிப்பு முயற்சி, முழக்கம், என நேற்று சேலம் கிழக்கு மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் ஸ்டாலின் காதுக்கு எட்டியதும் அவரது கோபம் இன்னும் பன்மடங்கு அதிகமாகியுள்ளது. என்ன நினைக்கிறார் வீரபாண்டி ராஜா என துரைமுருகன், நேரு உள்ளிட்டோரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நேரு அழைப்பு
வீரபாண்டி ஆறுமுகமும், நேருவும் ஒரே அமைச்சரவையில் மூன்று முறை ஒன்றாக இருந்தவர்கள். அந்த வகையில் நேருவுக்கு வீரபாண்டி ஆறுமுகம் மீது ஒரு வித மரியாதை உண்டு. இதனால் அவரது மகனான வீரபாண்டி ராஜா மீதும் நேரு ஓரளவு பரிவு காட்டுவார். இந்நிலையில் தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவி பெற்றதற்காக தலைவரை வந்து பார்க்கவில்லையா, வாப்பா வந்து பார்த்துட்டு போ என நேரு தான் அவரை அழைத்தாராம். அப்போது வீரபாண்டி ராஜா ரொம்பவே முறுக்கியுள்ளார். தலைவரை பாரு பேசிக்கலாம் என்பதோடு நேரு முடித்துக்கொண்டாராம்.
கேசுவல்
சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவலிங்கம், மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செல்வகணபதி ஆகியோர் ஸ்டாலினை சந்திப்பதற்காக அண்ணா அறிவாலயம் வந்தனர். இதனால் அவர்களுடன் சேர்ந்து தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவி பெற்ற வீரபாண்டி ராஜாவும் ஸ்டாலினை சந்திக்க வந்தார். தனது அதிருப்தியையும், ஆதங்கத்தையும் ஸ்டாலினிடம் காட்ட வேண்டும் என்பதற்காக கட்சி கரைவேட்டியை தவிர்த்து பேண்ட் ஷர்ட் அணிந்து வந்திருந்தார் ராஜா.
ஊக்கம்
சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு, அதாவது ராஜா இருந்த இடத்தில் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சிவலிங்கத்திடம், தைரியமாக கட்சி பணியாற்றுங்கள், என ஸ்டாலின் ஊக்கமளித்துள்ளார். அதேபோல் செல்வகணபதியிடமும் உற்சாகம் பொங்க ஸ்டாலின் பேசியுள்ளார். வீரபாண்டி ராஜாவிடம் பெயருக்கு இரண்டு வார்த்தை பேசிவிட்டு அனுப்பிவைத்திருக்கிறார். அதன் பின்னர் நேருவிடம் தனது மனக்குமுறலை கொட்டியுள்ளார் ராஜா.