மீண்டும் திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்.. துரைமுருகன், டிஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்
சென்னை : திமுக தலைவராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வாகிறார். 2வது முறையாக போட்டியின்றி தேர்வாகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், அவரே மீண்டும் தலைவராக அறிவிக்கப்பட இருக்கிறார்.
கருணாநிதி மறைவுக்குப் பிறகு 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், மீண்டும் நடந்துள்ள 15வது உட்கட்சி தேர்தலில் போட்டியின்றி திமுக தலைவராக தேர்வாகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
திமுக தலைவர் தேர்தல்..நல்ல நேரத்தில் மனு தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின், துரைமுருகன்.. பரபர அறிவாலயம்
திமுக உட்கட்சி தேர்தல்
திமுகவின் 15வது உட்கட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கிளை, ஒன்றிய, பேரூர், நகர, வட்ட, மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் முறையாக அறிவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 72 கழக மாவட்டங்களில் 71 மாவட்டச் செயலாளர் பதவிக்கு நடந்த தோ்தலில் 64 மாவட்ட செயலாளர்கள் மீண்டும் அதே பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 7 மாவட்டச் செயலாளர்கள் மட்டும் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக தலைவர் தேர்தல்
வரும் 9-ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் தோ்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் புனித ஜாா்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
வேட்பு மனு தாக்கல்
இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் இன்று அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
ஸ்டாலின் வேட்பு மனு
தற்போதைய தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கட்சித் தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வேட்பு மனுவை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அளித்தார். அமைச்சர்கள் பலரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
போட்டியின்றி தேர்வாகிறார்
இதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில் 5 மணியோடு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைந்தது. இதையடுத்து, தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், தற்போது இரண்டாவது முறையாக முக ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வாக உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுக்குழுவில் வெளியிடப்படும்.
2018 ஆகஸ்ட் முதல்
கருணாநிதி மறைவுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு தற்போது மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படுகிறார் ஸ்டாலின். மேலும், திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.