முதல்வரின் துக்கத்தை பகிர்ந்து கொண்டு ஆறுதல் சொன்ன மு.க ஸ்டாலின் - மாறும் அரசியல் ட்ரெண்ட்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்று ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் சொன்னது பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.
சென்னை: தமிழக அரசியல் வானில் பல மாற்றங்கள் தென்படத்தொடங்கியுள்ளது. எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் துக்கம் என்ற உடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவசாயி அம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். தாயாரின் மரண செய்தி பற்றி கேள்விப்பட்ட சில நிமிடங்களிலேயே தொலைபேசி மூலம் ஆறுதல் சொன்னார் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்.
கட்சி பேதமின்றி அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ட்விட்டர் மூலமும், தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறியுள்ளனர்.
ஓடோடி சென்ற ஸ்டாலின்
தாயாரின் மறைவிற்காக சொந்த ஊர் சென்று இறுதிச்சடங்குகள், மூன்று நாட்கள் காரியம் முடிந்து சென்னை திரும்பினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இன்று காலையில் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் சொன்னார். அரசியல் வேறு சொந்த வாழ்க்கை வேறு என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் மு.க.ஸ்டாலின்.
எதிரி கட்சி அல்ல
அரசியலில் எதிர்கட்சியாகத்தான் இருக்கிறோமே தவிர எதிரி கட்சியாக இல்லை என்று உணர்த்தியுள்ள மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது துக்கத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கருணாநிதி vs ஜெயலலிதா
அதிமுகவும் திமுகவும் ஆரம்பம் முதலே எதிர் எதிர் துருவங்களாகவே இருந்துள்ளன. கருணாநிதியும் ஜெயலலிதாவும் உயிரோடு இருந்தவரை சட்டசபையில் தவிர வேறு எதற்காகவும் நேரில் சந்தித்து பேசியதில்லை. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது மு.க ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அன்று ஆறுதல் சொன்ன ஓபிஎஸ்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைவரும் மு.க ஸ்டாலின் தந்தையுமான கருணாநிதி மருத்துவமனையில் இருந்த போது நேரில் சென்று நலம் விசாரித்தார் ஓ.பன்னீர் செல்வம். கருணாநிதி மறைந்த பிறகு மெரீனாவில் இடம் ஒதுக்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சென்று கோரிக்கை வைத்தார் ஸ்டாலின்.
அம்மாவின் மரணத்திற்கு ஆறுதல்
கட்சி ரீதியாகவும், அரசியல் ரீதியாவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை மு.க. ஸ்டாலின் பலமுறை விமர்சனம் செய்துள்ளார். இந்த நேரத்தில் முதல்வரின் தாயாரின் மரணத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி துக்கத்தில் பங்கெடுத்துள்ளார் ஸ்டாலின். முதல்வருடன் எதிர்கட்சித்தலைவர் நேரில் சந்தித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக அரசியலில் திமுக அதிமுக இடையிலான உறவிலும் இது நல்ல மாற்றத்தை ஏற்படும் என்று பல அரசியல் கட்சித்தலைவர்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.