சிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராம் மறைவு.. முக ஸ்டாலின் இரங்கல்
சென்னை: சிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து அவரது மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிவானந்தா குருகுலத்தின் பொதுச் செயலாளராக இருந்தவர் ராஜாராம். இவர் உடல்நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ராஜாராம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராஜாராம் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறுகையில் தொண்டு என்று சொல்லுக்கு அடையாளமாகவும், அதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தும் கொண்ட சிவானந்தா குருகுலத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜாராம் அவர்களின் இறப்பு பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
சமூகத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள்-முதியோர் எனப் பலருக்கும் ஆதரவுக் கரமாக இருந்து மறுவாழ்வு அளித்தவர். என்னுடைய பிறந்தநாளில் அவரது குருகுலத்திற்குச் சென்று அங்கு தங்கியிருப்போருடன் அளவளாவி, நிதியுதவி வழங்கியிருக்கிறேன். அப்போது ராஜாராம் அவர்களின் தூய தொண்டுள்ளத்தையும் சலிப்பில்லாத அர்ப்பணிப்பையும் கவனித்துள்ளேன்.
அவரது மறைவால் வேதனையில் உள்ள அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆற்றிய தொண்டும் அவர் உருவாக்கிய சேவை அமைப்புகளும் என்றென்றும் நிலைத்திருக்கும். அதில் ராஜாராம் வாழ்ந்து கொண்டிருப்பார் என அந்த இரங்கல் செய்தியில் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.