களத்தில் இறங்கி அடித்தோம்.. ஆனால் காண்பதற்கு கருணாநிதி இல்லையே .. ஸ்டாலின் உருக்கம்
சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியான நாம் அபார வெற்றி பெற்றுவிட்டோம். ஆனால் அதை காண்பதற்கு கருணாநிதி இல்லையே என திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 37 இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. அது போல் சட்டசபை தேர்தலில் 13 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழகத்தில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த தொண்டர்களை பார்க்க திமுக தலைவர் ஸ்டாலின் வந்திருந்தார். அப்போது அவர் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அவர் பேசுகையில் திமுக கூட்டணிக்கு வெற்றியை உருவாக்கித் தந்திருக்கும் வாக்காளர்களுக்கு எனது நன்றி. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் சட்டசபை இடைத்தேர்தலிலும் சிறப்பான ஒரு வெற்றியை வாக்காளர்கள் தேடி தந்துள்ளனர்.
இன்னும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு பெறாத நிலையிலும் நாடாளுமன்றம், சட்டசபை ஆகிய தேர்தல்களில் மிகப் பெரிய வெற்றியை தேடி தந்துள்ள தமிழ் பெருங்குடிகளுக்கு நன்றி. இந்த வெற்றியை பெற பாடுபட்ட தலைவர் கருணாநிதியின் உயிருனும் மேலான அன்பு உடன் பிறப்புகளுக்கும் எனது நன்றி.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இந்த வெற்றிக்கு அரும்பாடுபட்டிருக்கக் கூடிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணியுடைய எண்ணங்களை, உணர்வுகளை மக்களுக்கு தெரிவித்த ஊடக, பத்திரிகைத் துறையினருக்கும் நன்றி.
நாம் களத்தில் இறங்கும் போது கருணாநிதி இல்லாமல் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என உறுதியளித்தபடி வெற்றி பெற்றுவிட்டோம். கருணாநிதி வழியில் நாம் பாடுபட்டிருக்கிறோம். இந்த வெற்றி மாலையை அவரது சமாதிக்கு சென்று அவரிடம் சமர்ப்பிப்போம் என நாம் உறுதி அளித்துள்ளோம்.
இந்த வெற்றியை காண கருணாநிதி இல்லாமல் போனது வருத்தமாக உள்ளது என்றார் ஸ்டாலின்.