அன்று தேமுதிக.. இன்று அதிமுக + ரஜினி மன்றம்.. அதிர வைக்கும் திமுக ஸ்கெட்ச்!
ரஜினி மக்கள் மன்றத்தை மு.க.ஸ்டாலின் குறி வைக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: பழைய ஃபார்முலாதான்... ஆனாலும் திமுகவுக்கு இப்போ செமயாக வொர்க் அவுட் ஆகுது. மு.க.ஸ்டாலினின் அடுத்த டார்கெட் ரஜினியா? என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது.
செல்வாக்கு மிக்கவர், மற்றும் அந்த மாவட்டத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் தங்கள் கட்சி தலைமை மீது அதிருப்தியாக இருந்தால் அதை மாற்று கட்சிகள் மிக அழகாக பயன்படுத்தி கொள்ளும்.
இதில் சரியான வெற்றி பெறுவது பெரும்பாலும் திமுகதான். இப்படித்தான் கடந்த 2016-ம் ஆண்டின்போது, தேமுதிக எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன், சி.எச்.சேகர் போன்றோரை திமுக தன் பக்கம் இழுத்து கொண்டது.
கரைந்த தேமுதிக
அதற்கு பதிலாக அந்த தேர்தலில் 3 பேருக்குமே முக்கிய தொகுதிகளை தேர்தலில் ஒதுக்கியும் தந்தது. ஆனால் அவர்கள் 3 பேருமே வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம் என்றாலும், தேமுதிக கரைய தொடங்கியது இந்த கட்சி தாவலின் புள்ளியில் இருந்துதான்.
செந்தில்பாலாஜி
இப்போதும் அதே பாணியைதான் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார். செந்தில்பாலாஜி என்ற பசையுள்ள பார்ட்டியை கட்டம் கட்டி தூக்கி கொண்டு வந்துவிட்டு, பெரிய பொறுப்பையும் தந்து அசத்திவிட்டார். கூடவே கரூர் மாவட்ட புள்ளிகளையும் அடுத்தடுத்து தன் பக்கம் சாய்த்து வருகிறது திமுக.
மக்கள் மன்றம்
இப்போது அடுத்த வலையை ரஜினி பக்கம் விரித்துள்ளது. முதல் கட்டமாக ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 350 பேர் திமுகவில் நேற்று இணைந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 25,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வருகிற 23ம் தேதி கிருஷ்ணகிரியில் திமுகவில் இணைய உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமமுக, ரஜினி
அப்படி என்றால் திமுகவின் அடுத்த டார்கெட் ரஜினிதானா? மக்கள் மன்றத்தை உடைத்து முக்கியமான செயல்வீரர்களை இழுத்து ரஜினியை ஸ்தம்பிக்க வைக்கும் திட்டமா இது? என்றும் தெரியவில்லை. ஒருவேளை ரஜினி தரப்பின் முக்கிய நிர்வாகிகளை திமுக வளைத்து போட்டால் கொஞ்ச நஞ்சம் இருக்கும் ரஜினியின் கிரேஸ் காணாமலேயே போய்விடும்.
முக்கிய புள்ளிகள்
இன்னொரு பக்கம் அமமுக, ரஜினி என்று ஒவ்வொரு கட்சியாக கவனத்தை திருப்பி ஸ்கெட்ச் போட்டு வருவது திமுகவின் பலத்தை அதிகரிக்கவே செய்யும். இதுவரை வேறு கட்சியிலிருந்து வந்தவர்களை வெறும் கையோடு விட்டதில்லை திமுக. தன்னை நாடி வரும் முக்கிய புள்ளிகளுக்கு பொறுப்பையும் கொடுத்து அவர்களையும் தூக்கிவிட்டு கட்சியையும் தூக்கி நிறுத்தி வருகிறது.
பலம் தருமா?
இது தேசிய கட்சிகள் என்று கூறப்படும் 2 கட்சிகளிடம் காணாத டெக்னிக் ஆகும். இப்போது ரஜினி மன்றத்தில் ஸ்டாலினின் பார்வை விழுந்துள்ளது எந்த அளவுக்கு கட்சிக்கு பலத்தை தரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.