திராவிட இயக்கங்களின் வரலாற்றில் முதல்முறை.. மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு காரணம் என்ன?
Recommended Video
சென்னை: நான் இந்துக்களுக்கு எதிரி இல்லை என கூறியுள்ளார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திராவிட இயக்க தலைவர்கள் எளிதில் உதிர்க்காத வார்த்தை இது. இப்படி பேச ஸ்டாலினுக்கு அவசியமும், அவசரமும் வந்துள்ளது.
அரக்கோணம் சோளிங்கரில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து பிரசாரம் செய்தபோதுதான், இதைச் சொல்லியுள்ளார் ஸ்டாலின்.
நான் இந்துக்களுக்கு எதிரானது என்பது போல் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல என்றும், திமுகவும் கூட இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், அதன்பிறகு கூறியது ஹைலைட். என் மனைவி கோயிலுக்கு செல்வதை நான் ஒரு போதும் தடுத்தது இல்லை என்று சொல்லியுள்ளார் ஸ்டாலின்.
ஏன் இந்த பேச்சு
இந்துத்துவா vs சிறுபான்மையினர் என்ற பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகளின் அணி திரட்டலுக்கு நடுவே ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இந்துக்கள் திமுகவிற்கு வாக்களிக்க கூடாது என்ற வாட்ஸ்அப் மீம் பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், ஸ்டாலின் அதற்கு பதிலடியாக இவ்வாறு பேசியுள்ளார்.
கோயில்களில் ராகுல் காந்தி தரிசனம்
தமிழகத்தில் என்று கிடையாது. தேசிய அளவிலுமே, நான் இந்துக்களுக்கு எதிரானவர் இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் எழுந்தது. வட இந்தியாவிலுள்ள முக்கிய கோயில்கள் அனைத்திற்கும், ராகுல் காந்தி சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பியுள்ளார். இதெல்லாம் கடந்த ஓராண்டில் நடைபெற்ற மாற்றம். ராகுல் காந்தியின் 'டெம்பிள் ரன்' என்ற வாக்கியம் ரொம்பவே ஃபேமஸ் ஆனது அப்போதுதான்.
நான் இந்துக்களுக்கு எதிரியல்ல.. மனைவி கோயிலுக்கு செல்வதை நான் தடுத்ததில்லை.. ஸ்டாலின்
மத ரீதியான அணி திரட்டல்கள்
சோனியாவை கிறிஸ்தவர் என்று முத்திரை குத்தப்படுவதால், ராகுல் காந்திக்கு இப்படி ஒரு தேவை எழுந்தது. இதன் உச்சமாக தன்னை பிராமணர் என்று பொதுவெளியில் கையெழுத்திட்டும் குறிப்பிட்டார் ராகுல். இப்போது திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என கூறுவதால் தனது மனைவி துர்கா கோயிலுக்கு போவதை தடுக்கவில்லை என பொதுவெளியில் கூற வேண்டிய தேவை இப்போது ஸ்டாலினுக்கும் எழுந்துள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
எதிர்முகாம் வலிமை
முன்பும் இதுபோன்ற விமர்சனங்கள் இருந்தன. ஆனால், அப்போது பாஜகவின் அணி திரட்டல் இப்படி வலுவாக இல்லை. எனவே சாப்ட் ஹிந்துத்துவாவை கையிலெடுக்க வேண்டிய தேவை ராகுல் காந்திக்கோ, ஸ்டாலினுக்கோ முந்தைய திமுக தலைவர்களுக்கோ வந்தது இல்லை. அண்ணாவோ, கருணாநிதியோ கடவுள் இல்லை என்று சொன்னதோடு, கேலியும் பேச முடிந்தது. ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் அப்படியான அதிரடியை திமுக தலைமை காட்ட முடியவில்லை. காங்கிரஸ் தலைமையின் அதே சிக்கலில் திமுகவும் சிக்கியுள்ளது.
ரிஸ்க் அதிகம்
இதுகுறித்து தமிழக அரசியல் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம். அவர் கூறுகையில், ராகுல் காந்தி போல கோயில்களுக்கு ஸ்டாலின் வழிபாடுகள் நடத்த செல்வது கேள்விக்குறி. ஆனால், விமர்சனம் இருக்காது என்றே எதிர்பார்க்கிறோம். ஸ்டாலினுக்கு கத்திமேல் நடப்பது போன்ற நிலை இது. முன் எப்போதும் திராவிட கட்சி தலைமைகளுக்கு இப்படியான நிலை வந்தது இல்லை. ஆனால் இப்போது ஸ்டாலின் இந்துக்களையோ, நம்பிக்கைகளையோ தாக்கி பேசினால், அது பாஜகவுக்கு சாதகமாகிவிடும் என்ற அச்சம் உள்ளது. தாக்கிபேசாமல் இருந்தாலும், திமுக தனது தனித்தன்மையை இழந்துவிடும். சிறுபான்மையினரின் பாதுகாப்பு கட்சி என்ற தோற்றம் போனால் அதுவும் வாக்கு வங்கியை பதம் பார்த்துவிடும். இதற்கு தீர்வு ராகுல் காந்திபோல சாப்ட் ஹிந்துத்துவாவை பின்பற்றுவதுதான். அதுதான் இன்றைய பேச்சின் நோக்கம் என்கிறார்.