''பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது''.. திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு
Recommended Video
சென்னை: நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பும் நோக்கதிலேயே முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்ணா அறிவாலயம் மேலாளர் பத்மநாபன் இல்ல மணவிழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்த அவர் அங்கு இதனைக் கூறினார். கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும், அதனை ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்தி வெளியிடக் கூட மறைமுக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
பொருளாதார மந்தநிலையை பற்றி மக்கள் சிந்திக்காத வகையில் காஷ்மீர் விவகாரம், ப.சிதம்பரம் கைது நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாக கூறினார். சிதம்பரம் கைது பற்றி கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சிதம்பரம் சட்ட நிபுணர் அதனால் அவரை அவர் பார்த்துக்கொள்வார் என பொதுவான பதிலை அளித்திருந்தார். இந்நிலையில் சிதம்பரம் கைது பற்றி முதல் முறையாக மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் ஏற்கனவே 2 முறை நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், அளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் பற்றி சட்டமன்றத்திலேயே தாம் வெள்ளை அறிக்கை கேட்டதாகவும், அதற்கு இதுவரை தமிழக அரசு பதில் அளிக்கவில்லை எனவும் ஸ்டாலின் சாடினார்.
முதலமைச்சர் வெளிநாடு சென்றிருந்தால் கூட மக்கள் ஏற்றுக்கொள்வார்கள், ஆனால் கேபினட்டே சுற்றுலா சென்றால் அதை எப்படி ஏற்க முடியும் என வினவினார். இன்னும் 7 அமைச்சர்கள் விரைவில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல உள்ள தகவல் கிடைத்துள்ளதாகவும், தமிழக அரசு அமைச்சரவை என்பதற்கு பதில் சுற்றுலா அமைச்சரவை என அழைத்தால் தான் பொருத்தமாக இருக்கும் என விமர்சித்தார்.