குளுகுளு அறையில்... கொதிப்புடன் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள அக்கார்டு ஹோட்டலில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதை கேட்டு பல நிர்வாகிகள் வியர்த்து விறுவிறுத்து போயினர்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பேசிவிட்டு வழக்கம் போல் அறிவுரைகளை கூறி கூட்டத்தை முடித்துவைப்பார் ஸ்டாலின் என எதிர்பார்த்திருந்த நிர்வாகிகளுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
ஆளுங்கட்சியுடன் இணைந்து ஆட்டம் போடுபவர்களின் பட்டியலை காட்டவா என ஸ்டாலின் கேட்டதாகவும், இதையடுத்து பாதி பேரின் முகம் வெளிரிபோனதாகவும் கூறப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டம்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தி.நகரில் உள்ள ஜெகத்ரட்சனுக்கு சொந்தமான அக்கார்டு 5 நட்சத்திர விடுதியில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின், அமைச்சர்களுக்கு எதிராக போராட்டமோ, எதிர்ப்போ செய்யாமல் சில மாவட்டச் செயலாளர்கள் சைலண்ட் மோடில் உள்ளதாகவும், அது யார் யார் என்பது பற்றிய விவரம் தம்மிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பார்வையில் கோபம்
மேலும், குறிப்பிட்ட சில மாவட்டச் செயலாளர்களின் முகத்தை பார்த்து ஸ்டாலின் இப்படி பேசிக்கொண்டே போக அவர்களின் முகம் வெளிரத் தொடங்கியுள்ளது. இதனால் குளுகுளு அறையிலும் கூட்டம் முடியும் வரை ஒரு சில மாவட்டச் செயலாளர்களுக்கு வியர்வை வடிந்துள்ளது.
விரைவில் மாற்றம்
திமுகவில் இப்போது அமைப்பு ரீதியாக 65 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில் அதில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாம். சில மாவட்டங்களை பழைய படி ஒன்றிணைத்தும், சில மாவட்டங்களை மேலும் சில பகுதிகளாக பிரிக்கவும் திட்டம் தயாராகி வருகிறதாம்.
ஸ்டாலின் எச்சரிக்கை
இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின், வயதான மாவட்டச் செயலாளர்களுக்கு பதில் சில இடங்களில் துடிப்பான நடுத்தர வயதுடைய நபர்களை மாவட்டச் செயலாளர்களாக களமிறக்க நினைக்கிறாராம். இதற்கான பட்டியல் கூட தயார் நிலையில் உள்ளனவாம். ஆனால், இப்போது அதைப்பற்றி பேசாத அவர், உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு அதிரடியில் இறங்கலாம் என காத்திருக்கிறாராம்.