கிராம சபை கூட்டம்.. கமல் ஸ்டைலில் மு.க.ஸ்டாலின்!
சென்னை: கிராம சபை கூட்டங்களுக்கு கமல்ஹாசன் புத்துயிர் கொடுத்து தோண்டி எடுத்ததற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலினும் அதை கையில் எடுத்துள்ளார்.
கிராம சபை கூட்டங்கள் வெறும் சம்பிரதாயங்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தை மற்றவர்களை காட்டிலும் கமல் தோண்டி எடுக்க தொடங்கினார். இதற்காக மக்கள் நீதி மய்யம் சார்பில் மாதிரி கிராம சபை கூட்டங்களை நடத்தும் வழக்கத்தை முதலில் கொண்டு வந்தார். இதில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
கிராம சபை கூட்டங்கள் மூலம் காவிரி பிரச்சினைகளுக்கு கூட தீர்வு காண முடியும். ஆனால் 25 ஆண்டுகளாக நம் கையில் உள்ள இந்த பொக்கிஷத்தை நாம் பயன்படுத்துவதில்லை என்று கமல் அடிக்கடி கூறி வந்தார்.
சுட்டிக் காட்டினார்
எத்தனையோ அரசியல்வாதிகள் இருக்க, கமல்ஹாசன் அவர் கட்சி சார்பில் கிராம சபை கூட்டங்களை நடத்தி அதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் புரிய வைத்தார். பிரித்தாளும் அரசியலால் கிராம பஞ்சாயத்துகள் வலுவிழந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஆயுதம்
கமல்ஹாசன் நடத்திய கிராம சபை கூட்டங்களின் மாதிரிகளையும் அதற்கு கிடைத்த வரவேற்பையும் பார்த்த அரசியல்வாதிகள் அடடா இதை நாம் மிஸ் பண்ணிட்டோமே என எண்ணினர். தற்போது அந்த ஆயுதத்தை ஸ்டாலினும் கையில் எடுத்துள்ளார்.
மூன்று முழக்கங்கள்
ஸ்டாலின் வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஊராட்சி சபை கூட்டம் என்பதை தொடங்குகிறார். திருவாரூரில் முதல் கூட்டம் தொடங்குகிறது. மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம் என்ற மூன்று முழக்கங்களை முன் வைக்க உள்ளனர்.
திமுக திட்டம்
இதன்படி மத்திய - மாநில அரசுகளின் அவலங்களை மக்களுக்கு துண்டுபிரசுரங்கள் மூலம் எடுத்துச் சொல்ல திமுக திட்டமிட்டுள்ளது. கமல் கூட்டிய கூட்டம் கிராமங்களில் உள்ள மக்கள் பிரச்சினைகளை களைப்பதற்காக கூட்டினார். ஆனால் ஸ்டாலின் கூட்டிய கூட்டம் மத்திய- மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை எடுத்துரைப்பதற்காக கூட்டுகிறார். இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.
முன்மொழிந்த ஸ்டாலின்
எல்லாவற்றிலும் அரசியல் அரசியல் என்றாகிவிட்ட நிலையில் ஊராட்சி சபை கூட்டங்களிலாவது மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை ஸ்டாலின் முன்னிறுத்தியிருக்கலாம். ஆனால் அரசியல்வாதிகள் ஓட்டுக்காக மட்டுமே நம்மை சந்திக்க வருவர் என மக்களின் எண்ணத்தை ஸ்டாலினும் அப்படியே முன்மொழிகிறாரே என்கின்றனர் விவரம் அறிந்த வட்டாரங்கள்.
பிரச்சினைகள்
மக்கள் குறைகளை கமல்ஹாசன் கேட்டறிந்திருக்கலாம்... ஆனால் தற்போதைய அரசின் மக்கள் விரோத போக்கு குறித்து எடுத்துரைத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பினால்தானே மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்கின்றனர் திமுகவினர்.
என்னதான் சொல்லுங்கள்... நம்ம நம்மவரை யாராவது அடித்துக் கொள்ள முடியுமா என்கின்றனர் மய்ய நிர்வாகிகள்.