கலைஞர் அரங்கத்தை கொரோனா வார்டாக பயன்படுத்துக... பெருந்தன்மையுடன் ஸ்டாலின் ஒப்புதல்
சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கொரோனா சிகிச்சை வார்டாக பயன்படுத்திக் கொள்ள மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கான ஒப்புதல் கடிதத்தை திமுக எம்.எல்.ஏ.க்களான சேகர்பாபுவும், மா.சுப்பிரமணியனும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷை நேரில் சந்தித்து வழங்கினர்.
ஏற்கனவே கமல்ஹாசன், நடிகர் பார்த்திபன் போன்றவர்கள் தங்கள் இல்லத்தை கொரோனா சிகிச்சை வார்டாக பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் தெரிவித்திருந்த நிலையில் ஸ்டாலினும் பெருந்தன்மையுடன் இந்த அறப்பணிக்கு கலைஞர் அரங்கை அர்ப்பணித்துள்ளார்.
நியுயார்க், காசர்கோடு போல மாறலாம்.. ஈரோடுதான் கவலையளிக்கிறது.. தமிழகத்தின் கொரோனா எபி-சென்டர்!
போதிய இடம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான இடவசதி குறைவாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் மற்ற பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளையும் கவனிக்க வேண்டும் என்பதால் கொரோனாவுக்கு தனிமை வார்டு ஒதுக்க போதிய இடமில்லாத சூழல் உள்ளது. இதனால் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரர் பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்திற்கு கொரோனா சிகிச்சை வார்டு மாற்றப்பட்டுள்ளது.
பெருந்தன்மை
இக்கட்டான இந்த பேரிடர் காலத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலும், நடிகர் பார்த்திபனும் தங்கள் இல்லங்களை கொரோனா சிகிச்சை வார்டாக தர தயாராக இருப்பதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கொரோனா சிகிச்சை வார்டாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசை கேட்டுக்கொண்டுள்ளார். கலைஞர் அரங்கில் சுமார் 500 நோயாளிகள் வரை தனிமைப்படுத்த கூடிய அளவுக்கு இடவசதி உள்ளது.
ஒப்படைப்பு
அரசு சார்பில் கலைஞர் அரங்கத்தை கொரோனா சிகிச்சை வார்டாக பயன்படுத்திட உரிய ஏற்பாடுகளை செய்ய வரும் அரசு அதிகாரிகளுக்கு, திமுக சார்பில் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்ட கடிதம் முறையாக மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தை கொரோனா சிகிச்சை வார்டாக பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராட்டு
இதனிடையே கொரோனா என்ற கிருமி சுனாமியில் சிக்கி மக்கள் மன நிம்மதியின்றி தவித்து வரும் சூழலில் சிகிச்சை அளிப்பதற்கான இடத்தை பெருந்தன்மையுடன் முன் வந்து கொடுத்ததற்காக ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன. இதேபோல் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து அவர் எடுத்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.