பத்மஶ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுகவின் மூத்த முன்னோடியான பத்மஶ்ரீ விருது பெற்றுள்ள கோவை பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளதாவது:
பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கும் கழக முன்னோடி, 103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கும் பாப்பம்மாள் அவர்களை இன்று கோவையில் நேரில் சந்தித்து வாழ்த்தினேன்!
உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி!
மத்திய அரசு நிபந்தனையின்றி விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்- மு.க. ஸ்டாலின்
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக பாப்பம்மாள் பாட்டிக்கு கருணாநிதி உருவ சிலையுடனான நினைவுப் பரிசை ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக, கோயம்புத்தூர் - ஈச்சனாரியில் நடைபெற்ற - முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிசாமி மகன் ஸ்ரீகார்த்திக் பழனிசாமி - ஸ்நேஹா மஹாலட்சுமி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதேபோல் கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜெகதீசன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி தி.மு.கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், பகுதிச் செயலாளர்கள் எஸ்.ஏ.காதர், கார்த்திகேயன், வட்டச் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.