தமிழகத்தில் போதியளவில் ஆக்சிஜன் உள்ளதா.. உயர் அதிகாரிகளுடன் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 27 உட்படப் புதிதாக 24,898 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதேபோல மாநிலத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் உள்ளிட்ட தமிழக அரசு முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைத்திட மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், கையிருப்பு, உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்துவரும் நிலையில், மேலும் 24,898 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இத்தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மற்றும் பிற அலுவலர்களுடன் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தின் ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், தேசிய ஆக்சிஜன் பகிர்ந்தளிப்புத் திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை முழுமையாகப் பயன்படுத்தியும், பிற மாநிலங்களிடமிருந்து பெற்றும் தங்கு தடையின்றி நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.