திண்டுக்கல் சீனிவாசன் மட்டுமல்ல.. அதிமுகவில் பல அமைச்சர்கள் அப்படித்தான்.. முக ஸ்டாலின் சுளீர்!
அதிமுக அமைச்சர்கள் குறித்து முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்
சென்னை: "இது போன்று ஒரு அமைச்சர் மட்டுமல்ல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய பல அமைச்சர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்... அது ஜெயக்குமாராக இருந்தாலும் சரி.. ராஜேந்திர பாலாஜியாக இருந்தாலும் சரி" என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயல்குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில், கோயில் வளர்ப்பு யானைகளுக்கு இன்று முதல் புத்துணர்வு முகாம் தொடங்க இருக்கிறது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு, அமைச்சர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.. வரும் வழியில் அவரது செருப்பு புல்வெளியில் சிக்கிக் கொண்டது. செருப்பின் பக்கிளை ஒரு பழங்குடியின சிறுவனை அழைத்து கழற்றிவிடுமாறு அமைச்சர் சொன்னார்.. இந்த விவகாரம் வெடித்து சர்ச்சையானது.
"இங்க வாடா.. இதை கழட்டி விடு" பழங்குடியின சிறுவனிடம் தன் செருப்பை கழற்ற சொன்ன திண்டுக்கல் சீனிவாசன்
"அந்த 2 பேரில் ஒருத்தன் என் பேரன் மாதிரியே.. சின்னப்பிள்ளையா இருந்தான்.. அதனாலதான் கூப்பிட்டு செருப்பு பக்கிகளை கழற்றிவிட சொன்னேன். அவ்வளவுதான்.. இதுல எந்த உள்நோக்கமும் இல்லை" என்று அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் கருத்து கேட்டனர். அப்போது அவர் சொன்னதாவது:
"இது போன்று ஒரு அமைச்சர் மட்டுமல்ல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய பல அமைச்சர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்... அது ஜெயக்குமாராக இருந்தாலும் சரி.. ராஜேந்திர பாலாஜியாக இருந்தாலும் சரி.. எந்த உறுதிமொழியுடன் அவர்கள் பதவியேற்றார்களோ, அதை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. அதனுடைய, உச்சமாக இன்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இப்படி செய்திருக்கிறார். இதனை நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றார்.