காங். அணியில் இணையுங்க.. ஸ்டாலின் அழைப்பால் கே.சி.ஆர். 'ஷாக்'
Recommended Video
சென்னை: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற வேன்டும் என்று திமுக தலைவர் விடுத்த அழைப்பால் தெலுங்கானா முதல்வரும் டி.ஆர்.எஸ். தலைவருமான சந்திரசேகர ராவ் அதிர்ந்து போனார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
காங்கிரஸ், பாஜக அல்லாத 3-வது அணியை உருவாக்க வேண்டும் என்பது சந்திரசேகரராவின் திட்டம். ஆனால் பெரும்பாலான மாநில் கட்சிகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பது அல்லது காங்கிரஸையும் இணைத்துக் கொண்டு கர்நாடகா பாணியில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமைப்பது என்பதில் உறுதியாக உள்ளன.
இந்நிலையில் சந்திரசேகரவ் திடீரென கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.
ஸ்டாலின்-சந்திரசேகர ராவ் சந்திப்பு மரியாதை நிமித்தமானது: திமுக அறிவிப்பு
ஆனால் சந்திரசேகராவின் மகள் கவிதா, ஸ்டாலினிடம் நேரம் கேட்டிருந்தோம். இன்னும் கிடைக்கவில்லை என்றார். அறிவாலய வட்டாரங்களும் ஸ்டாலின் பிரசாரத்தில் இருப்பதால் நேரம் ஒதுக்கவில்லை என கூறின. இந்நிலையில்தான் இன்று சென்னையில் ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார்.
ஸ்டாலின் - சந்திரசேகராவ் சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நடைபெற்றது. இச்சந்திப்புக்குப் பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. வழக்கத்துக்கு மாறாக திமுக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது, அதில், சந்திரசேகராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அறிவாலய வட்டாரங்களில் விசாரித்த போது, சந்திரசேகராவின் சென்னை வருகையின் நோக்கம் காங்கிரஸ், பாஜக அல்லாத 3-வது அணி அமைக்க வேண்டும் என்பது. அப்படி ஒரு அணி அமைவது பாஜகவுக்கு சாதகமானது என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார். அதனால் சந்திரசேகராவின் கருத்துகளை முழுமையாக கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் பேசிய ஸ்டாலின், ராகுல் காந்திதான் பிரதமர் என முதன் முதலில் நான் தான் அறிவித்தேன். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்வதற்கு பதில் நீங்கள் காங்கிரஸ் தலைமையிலான அணியில் இடம்பெறலாம் அல்லது ஆதரவு தரலாமே என கூறினார் என்கின்றன. ஸ்டாலினின் இந்த பதிலை எதிர்பார்க்காமல் அதிர்ச்சி அடைந்ததால்தான் செய்தியாளர்கள் சந்திப்பை சந்திரசேகராவ் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.