ஞாயிறு காலை 10 மணிக்கு.. ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிடுகிறார் ஸ்டாலின்.. திமுக அறிவிப்பால் பரபரப்பு
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று திமுக கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை இன்று முறைப்படி துவங்கினார்.
பிரசாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே, அதிரடியாக, அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்போர் ஒவ்வொருவருக்கும் தலா 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
கொரோனா காலத்தில் வழங்க மறுத்த 5000 ரூபாயை மக்களுக்கு வழங்க வேண்டும்.. முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை
ஸ்டாலின் குற்றச்சாட்டு
இது குறித்து கேள்வி எழுப்பிய திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் தனது சுயநலத்திற்காக, தேர்தல் ஆதாயத்துக்காக இப்போது இந்த நிதி உதவியை அறிவித்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது. கொரோனா நோய் தொற்று காலம் மற்றும் புயல் பாதிப்பு காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க நான் கேட்டுக்கொண்டேன். அதை முதல்வர் வழங்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இப்படியான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது சுயநலம் காரணமாக தான் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
முதல்வர் பதிலடி
இதற்கு பதிலடியாக, பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த பொங்கல் காலத்திலும், 1000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போது கொரோனா நோய் தொற்று மற்றும் புயல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நிதி உதவியை உயர்த்தி வழங்குகிறோம். கஷ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்வது தவறா என்று கேள்வி எழுப்பினார்.
முதல் நாளே சரவெடி
முதல்வர் பிரசாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே அதிரடி அறிவிப்பு.. அதற்கு பதில் கேள்வி.. அதற்கு பதிலடி என்று சூடு பறக்க ஆரம்பித்து உள்ளது அரசியல் களம். இந்த நிலையில் தான் திமுக பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பு மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுக பேஸ்புக் பக்கம்
திமுக முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டிசம்பர் 20ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, தலைவர் ஸ்டாலின் ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட உள்ளார். காத்திருங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் பேஸ்புக்கில் தங்கள் விருப்பத்தை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
என்ன அறிவிப்பு?
ஆன்லைன் மூலமாகத்தான் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று தெரிகிறது. ஆனால் எதைப் பற்றி என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பா? அல்லது ஆட்சியாளர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டா? கட்சி நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகிறதா? என்ற பல்வேறு கேள்விகளை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது.