சாட்டையை கையில் எடுக்கும் ஸ்டாலின்.. இனிதான் இருக்கு.. மா.செ.க்களுக்கு காத்திருக்கும் சவால்
Recommended Video
சென்னை: மீண்டும் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினாலும், பேசினார், நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.
என்னதான் லோக்சபா தேர்தலில் தேனி, தொகுதியைத் தவிர பிற அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும் கூட, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, இன்னமும் முழு திருப்தி ஏற்படவில்லை என்கிறது தகவல்கள்.
இதற்கு காரணம், திமுகவின் வாக்கு வங்கியை அதிகரிப்பதில் நிர்வாகிகள் உரிய கவனம் செலுத்தவில்லை என்ற ஆதங்கம்தானாம்.
லோக்சபா தேர்தல்
லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில், பிரதமர் யார் என்பதற்கான தேர்தல். மோடியா, ராகுல் காந்தியா என்ற கேள்வியின்போது தமிழக மக்களில் பெரும்பாலானோர் ராகுல் காந்தி என்ற தேர்வை கையில் எடுத்தனர். இதன் காரணமாக, திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், அதே நேரத்தில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளை வென்றாலும், அதிமுக 9 தொகுதிகளில் வெற்றி பெற்றதை மறக்க முடியாது.
அதன்பிறகு நடைபெற்ற வேலூர் லோக்சபா தேர்தலிலும் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போராடித்தான் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இடைத் தேர்தல்கள்
இதன் பிறகு சமீபத்தில் நடைபெற்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. எனவேதான் லோக்சபா தேர்தலையொட்டி ஸ்டாலின் மீது கட்டமைக்கப்பட்ட மாபெரும் பிம்பம் சரிந்து வருவது போல ஒரு தோற்றம் தென்பட தொடங்கி உள்ளது.
ரஜினிகாந்த் பேட்டி
இந்த நிலையில்தான், நடிகர் ரஜினிகாந்த் எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போல, "தமிழகத்தில் அரசியலுக்கான வெற்றிடம் இன்னமும் இருக்கிறது. ஆளுமை மிக்க தலைமைக்கு வெற்றிடம் உள்ளது" என்று அதிரடியாக ஒரு கருத்தை தெரிவித்தார். ரஜினி இவ்வாறு ஒரு குண்டு வீசிய சில நாட்களில் கூடியது திமுக பொதுக்குழு. என்ன கோபமோ என்னவோ தெரியவில்லை.. வீசி தள்ளிவிட்டார் ஸ்டாலின். அப்போதுதான், சர்வாதிகாரியாக மாறுவேன் என்று அவர் முழங்கினார்.
மா.செ.க்கள் அலட்சியம்
எல்லாவற்றையும் கட்சி மேலிடம் பார்த்துக்கொள்ளும். அதிமுக மீதான எதிர்ப்பு அலையில் வெற்றி பெற்று விடலாம் என்றெல்லாம் திமுக மாவட்ட செயலாளர்கள் சிலர் நினைத்துக் கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாகத்தான் திமுக படுதோல்வியை சந்திக்க நேரிட்டது என்றும் ஸ்டாலின் காதுகளுக்கு சென்றுள்ளது. திருநெல்வேலி முதல் திருவள்ளூர் வரை மொத்தம் 7 மாவட்ட செயலாளர்களை ஹிட் லிஸ்டில் எடுத்து வைத்துள்ளாராம் ஸ்டாலின்.
உள்ளாட்சித் தேர்தல்
வரும் சட்டசபை பொதுத் தேர்தலுக்கு முன்பாக தமிழகம் காண உள்ள மிகப்பெரிய தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்தான். எனவே, இந்த தேர்தலில் எந்த கட்சி அமோக வெற்றி பெறுகிறதோ அது சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் வாய்ப்பு அதிகம். இதைப் புரிந்து வைத்துள்ள ஸ்டாலின் சாட்டையை சுழற்ற தொடங்கி உள்ளார். இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றி பெறாவிட்டால், தனது கையில் உள்ள பட்டியலை எடுத்து மாவட்ட செயலாளர்களை பந்தாடவும், அவர் தயங்க மாட்டார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த உள்ளாட்சி தேர்தல் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அக்னி பரிட்சையாக மாறி உள்ளது என்றால் அது மிகை இல்லை.