பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு- பா.ஜ.க.அரசின் கூண்டுக்கிளியாகி தோற்றது சி.பி.ஐ.: ஸ்டாலின், கமல் விளாசல்
சென்னை: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை முன்வைத்து சிபிஐ மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் அத்வானி உட்பட 32 பேரை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழுகை நடத்தும் இடத்தை அழிக்கும் நோக்கத்துடன், மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது' என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னரும், சி.பி.ஐ. அதனை நிரூபிக்கத் தவறி இருப்பது இந்திய நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்ட தலைகுனிவு!
யாருமே குற்றவாளி இல்லை என்றால், பாபர் மசூதியை யார் தான் இடித்தது? ஓவைசி கேள்வி
பாஜகவின் கூண்டு கிளியாக சிபிஐ
அரசியல் சட்டத்திற்கு நெருக்கடி தந்த பாபர் மசூதி வழக்கில் நடுநிலையாகச் செயல்பட்டிருக்க வேண்டிய சி.பி.ஐ., பா.ஜ.க.அரசின் கூண்டுக்கிளியாகி, கடமை துறந்து, தோற்றிருப்பது நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்! இவ்வாறு ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா?
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில், நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என பதிவு செய்துள்ளார்.
திட்டமிட்ட அழிவுச் செயல்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கர சேவகர்களைத் தயார் செய்து, காவல்துறையும், இராணுவமும் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க, திட்டமிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் கைகளில் கடப்பாறைகளோடும், சம்மட்டிகளோடும் சென்று பாபர் மசூதியைப் பட்டப் பகலில் இடித்து நொறுக்கினார்கள். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட அழிவுச் செயல்.
நீதியின் அரண்கள் இடிப்பு
உச்சநீதிமன்றமும், திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் என்றுதான் குறிப்பிட்டது. இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், திட்டமிட்டு இச்சம்பவம் நடக்கவில்லை என்று அனைவரையும் விடுதலை செய்திருப்பது நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும். நடுநிலையோடு இப்பிரச்சினையை அணுகுகின்றவர்களின் மனசாட்சி இந்தத் தீர்ப்பு அநீதியின் தீர்ப்பு என்றுதான் கூறும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.