அரசு அறிவிக்க உள்ள திட்டங்களை, முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸ்டாலின் தெரிவித்து விடுகிறார்: முதல்வர்
சென்னை: அரசு அறிவிக்கும் திட்டங்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸ்டாலின் முன்கூட்டியே அறிவித்து வருகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டினார்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை மத்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில்தான் மாலை 3.30 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அப்போது அவர் கூறுகையில், நான் அறிவிப்பதைதான் முதல்வர் அறிவிக்கிறார் என்று ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். இந்த அரசு எந்தெந்த காலகட்டத்தில் மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
முதல்வர் என்பது மட்டும் கிடையாது. நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் மக்களின் வேதனைகளை மக்களோடு மக்களாக உணர்ந்தவன் என்பதால் உரிய நேரத்தில் தக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறேன்.
கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும், சுய உதவிக் குழுக்களில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று நான் அறிவித்தேன். நான் சொல்லித்தான் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு வருவதாக ஸ்டாலின் பேசி வருகிறார். உண்மைக்கு புறம்பான பொய்யை சொல்லி வருகிறார்.
ஒவ்வொரு கட்சியும் தனக்கென்று ஒரு கொள்கை வைத்துள்ளது. அந்த கொள்கை அடிப்படையில் தான் செயல்படுவோம். அவர் ஆட்சியில் இல்லை. எனவே, எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆட்சியில் இருப்பவர்கள், சிந்தித்து, கணக்கிட்டு அறிவிப்பு வெளியிட வேண்டியிருக்கும். அரசு இதுபோன்ற கணக்கீடுகளை செய்யும்போது அதை தெரிந்து கொண்டு பத்திரிகை வாயிலாக நான் அறிவித்ததை முதல்வர் அறிவிக்கிறார் என்று ஸ்டாலின் சொல்லிவிடுகிறார். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.