ஸ்டாலினின் கனவுத் திட்டத்திற்கு அடிக்கல்.. “பச்சை பசேல் மைதானம்”- மாடல் காட்டி விளக்கிய அதிகாரிகள்!
சென்னை : சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் செயற்கை புல் கால்பந்து மைதானம் ரூ.2.89 கோடியில் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் கலந்துகொண்டு தனது கனவுத் திட்டமான சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள செயற்கை புல் கால்பந்து மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
வெயிலுக்கு இதமாய் இளநீர் கொடுத்த பெண்.. ’ரொம்ப நன்றிங்கம்மா’..! ருசித்து குடித்த முதல்வர் ஸ்டாலின்!

சிங்கார சென்னை திட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மேயராக பதவி வகித்த காலத்தில் ‘சிங்காரச் சென்னை' திட்டத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் திமுகவின் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தற்போது அமைந்துள்ள நிலையில் அவரது கனவுத் திட்டமான சிங்காரச் சென்னை திட்டம் மறுஉருவம் பெற்றுள்ளது.

சிங்கார சென்னை 2.0
அதன்படி சிங்காரச் சென்னை 2.0 திட்டம் சென்னை மாநகராட்சியால் வகுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நட்புமிகு சென்னை, பசுமை சென்னை, தூய்மை சென்னை, நீர் மிகு சென்னை, எழில் மிகு சென்னை, நலமிகு சென்னை, பாதுகாப்பான சென்னை, கல்வியில் சென்னை, சீர் மிகு சென்னை, கலாச்சாரம் மிகு சென்னை உள்ளிட்ட பிரிவுகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

50 விளையாட்டு திடல்கள்
பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் வசதிக்காக பூங்கா மற்றம் விளையாட்டு திடல்கள் அமைக்கும் பணிகளும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் தற்போது 718 பூங்காக்கள் மற்றும் 163 சாலையோர பூங்காக்கள் உள்ளன. கூடுதலாக ரூ.100 கோடியில் 150 பூங்கா மற்றும் 50 விளையாட்டுத் திடல்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செயற்கை புல் மைதானம்
மேலும், 18 விளையாட்டு திடல்களை மேம்படுத்தும் பணி ரூ.12.57 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல இடங்களில் புதிய விளையாட்டு திடல்கள் அமைக்கப்படவுள்ளது. இதன்படி கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் "சிங்காரச் சென்னை 2.0" திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள செயற்கை புல் கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அடிக்கல் நாட்டினார்.

கிரவுண்ட் மாடல்
இதற்கான திட்ட வரைவுகள், வரைபடங்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கால்பந்து மைதானத்துக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், கால்பந்து மைதானம் தொடர்பான கட்டமைப்பை வரைபடம் மூலம் முதல்வர் ஸ்டாலினிடம் விவரித்தனர்.