இருந்த இடத்தில் இருந்தே பிக்பாஸ் போல் கண்காணிக்கும் ஸ்டாலின்.. மாஸ்டர் பிளான்!
சென்னை: திமுகவில் என்ன நடக்கிறது, யார் என்ன செய்கிறார்கள், என்ன செய்ய வேண்டும் என்பதை இருந்த இடத்தில் இருந்தே பிக்பாஸ் போல் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் கவனித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்டம் தோறும் சென்று தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை. அதற்கு பதிலாக ஆன்லைன் வாயிலாக மாவட்ட நிர்வாகிகளை தினசரி அழைத்து கூட்டம் நடத்தி வருகிறார்.
இதுவரை எந்த அரசியல் தலைவரும் செய்யாத ஒன்றையும் ஸ்டாலின் அண்மையில் செய்தார், இதன் மூலம் ஜூம் செயலி மூலம் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் இணைந்து ஸ்டாலினுடன் கலந்துரையாடினர்.
எம்ஜிஆர் ரசிகர்களை.. திமுகவுக்கு மாற்றுவது எவ்வளவு கஷ்டமோ.. அவ்வளவு கஷ்டம் கொங்கு மண்டலத்தை அள்ளுவது
காணொளி காட்சி
திமுக தலைவர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தினசரி ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளை அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார். அதுவும் ஒருவரோ அல்லது இருவரோ அல்ல ஒரே நேரத்தில் பலரை மண்டபத்தில் அமர செய்து அவர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறார். அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார்.
நெருங்கும் தேர்தல்
சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் 6 மாதங்களே உள்ளதால், அதற்குள் ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும் கோஷ்டி பூசல்களை களைந்து, அனைவரையும் ஒற்றுமையாக வேலை செய்ய வைக்க ஸ்டாலின் இந்த முயற்சியை எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் ஏராளமான நிர்வாகிகளுடன் பேச முடியும் என்பதுடன், அவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்த முடியும் என்பதால முக்கியமான திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
இதுவே ஹைலைட்
ஏனெனில் ஆளும் அதிமுக தலைமை இதுவரை மாவட்டம் தோறும் இதுபோன்று கூட்டங்களை ஒருங்கிணைத்து உறுப்பினர்களை கருத்து கூட்டங்களை நடத்தவில்லை. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் அவ்வப்போது நடக்கும். எனினும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு அடிமட்ட கட்சி நிர்வாகிளும் கருத்துக்களை கேட்க ஸ்டாலினே களம் இறங்கியிருப்பது தான் இதில் முக்கியமான ஹைலைட்.
ஸ்டாலின் திட்டமென்ன
தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுகவின் முதல்வர் வேட்பாளராக முக ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இந்த முறை சட்டசபை தேர்தலில் ஆளும் அதிமுக, திமுகவிடம் இருந்து கடும் சவாலை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் 234 தொகுதியிலும் நிர்வாகிகளின் செயல்பாடுகள், யாருக்கு என்ன பிரச்சனை என்பதையும் ஸ்டாலினே இருந்த இடத்தில் இருந்தே பிக்பாஸ் நேரடியாக கேட்டு தீர்த்து வருகிறார். இதன் மூலம் கோஷ்டி பூசலை குறைத்து தேர்தலை எளிதாக சந்திக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
ஸ்டாலின் முயற்சி கை கொடுக்குமா
கடந்த தேர்தலில் திமுக வெறும் ஒரு சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றது. கடந்த முறை 36 தொகுதிகளை திமுகவை அதிமுக கூட பெற்றதற்கு முக்கிய காரணம் கட்சியில் நிலவிய கோஷ்டி பூசல் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை விட்டுக்கொடுத்தது. இந்த முறை இந்த இரண்டுக்கும் வாய்ப்புக்கு இருக்காது என்று தெரிகிறது. ஸ்டாலின் நடத்தும் ஆன்லைன் கூட்டங்களை பார்த்தால் அதிக தொகுதிகளில் திமுக களம் இறங்குவது உறுதி என்பது தெரிகிறது. கடந்த முறை நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்தி நல்ல வெற்றியும் பெற்ற ஸ்டாலினுக்கு, இந்த முறை ஆன்லைன் கூட்டங்கள் எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.