நள்ளிரவில் விரைந்த ஸ்டாலின்.. குவிந்த ஆதரவாளர்கள்.. அதகளப்பட்ட தேர்தல் ஆணைய அலுவலகம்.. பரபர புகார்
சென்னை: கோயம்பேடு தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு இரவு 11.30 மணிக்கு விரைந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். தேர்தல் ஆணையரை சந்தித்து, தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க அவர் கோரிக்கைவிடுத்தார்.
இன்று காலை முதல், ஆங்காங்கு வாக்கு எண்ணிக்கை மையங்களில் பிரச்சனைகள், நடப்பதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி திமுக கூட்டணிக்கு கொண்டிருக்கும் நிலையில் திமுக வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக அதிமுக போலீஸ் மற்றும் அதிகாரிகள் சதி செய்வதாக இன்று மதியம் கோயம்பேட்டில் தேர்தல் ஆணையர் பழனிச்சாமியை சந்தித்த ஸ்டாலின் புகார் அளித்திருந்தார்.
இதன் பிறகு திமுக சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இரவோடு இரவாக அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெறுகிறது என்பது பற்றிய ஒரு அறிக்கையை தேர்தல் ஆணையம் ஹைகோர்ட்டில் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவு வெளியான பிறகு இரவு 11.30 மணி அளவில் மீண்டும் கோயம்பேடு பகுதியில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்தை நோக்கி ஸ்டாலின் காரில் கிளம்பினார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோரும் சென்றனர்.
ஸ்டாலின் வருகையை அறிந்த திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த பல வழக்கறிஞர்களும், தேர்தல் ஆணையம் பகுதியில் குவிந்து கொண்டிருப்பதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ஒருவேளை தேர்தல் ஆணையர் ஸ்டாலினை சந்திக்க மறுப்பு தெரிவித்தால், அங்கேயே தர்ணா போராட்டம் நடத்த ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
நாம் தமிழர் கட்சிக்கு முதல் வெற்றி.. தென்கோடி குமரி மாவட்டத்தில் அசத்திய சுனில்
இருப்பினும், தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்துவிட்டு பிறகு நிருபர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது: திமுக எந்தெந்த ஊர்களில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதோ, அந்த பகுதிகளில் அதை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு திட்டமிட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தருமபுரி, ராமநாதபுரம், கரூர், கடலூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்து எங்களுக்கு வரக்கூடிய தகவல்கள் ஏற்கனவே திமுக வெற்றி பெற்று அறிவிக்க வேண்டிய நிலையில் அதை அறிவிக்காமல் நிறுத்தி வைத்து அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
நியாயமாக திமுக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை முறையாக அறிவிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்திதான் தேர்தல் ஆணையரை சந்திக்க வருகை தந்துள்ளேன்.
வேறுவழி இல்லாமல்தான் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினோம். எங்கள் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்துக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஜனநாயக படுகொலை செய்துள்ளார்கள். வெறும் 30 முதல் 40 சதவீத தேர்தல் முடிவுகள் தான் வெளியாகியுள்ளன. அதற்குள்ளாகவே இவ்வளவு அக்கிரமங்கள் செய்துள்ளார்கள். மிச்சமுள்ள 70 விழுக்காடு பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பு, எத்தனை அத்துமீறல்கள் நடக்கும் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒருவேளை தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பேன், என்று நான் ஏற்கனவே கூறிய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இரவு 8 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் மூத்த தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் துரைமுருகன் டிஆர் பாலு, ஆர்எஸ் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிபிடத்தக்கது.