அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன். மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
நேற்று திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் திமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க அங்கீகாரம் அளித்தல், திருநங்கைகளை தி.மு.க.வில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்தல், தி.மு.க. அமைப்புத்தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடித்தல், வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைத்தல், தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்தல், இணைய தளம் மூலம் தி.மு.க. உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் கட்சி விதியில் திருத்தம் செய்தல், வெளிநாடுவாழ் இந்தியர்களை தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்தல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தல், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண வலியுறுத்தல் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஓய்ந்தது அயோத்தி பிரச்னை.. அடுத்தது சபரிமலைதான்.. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு தீவிரம்!
இந்த தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகமெங்கும் திமுக பொதுக்குழு தீர்மானங்களை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது திண்ணை பிரச்சாரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.