சூப்பர்.. மலரும் அரசியல் நாகரீகம்.., இது தான் எங்களுக்கு தேவை!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அவரது இல்லத்திற்கே சென்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் துக்கம் விசாரித்துள்ளார். எம்ஜிஆர், கருணாநிதி காலத்தில் இருந்த இந்த அரசியல் நாகரீகம் பல வருடங்களுக்கு தமிழகத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களான எடப்பாடி மற்றும் ஸ்டாலினிடம் வந்திருப்பதை பலரும் பாராட்டுகிறார்கள். தமிழகத்திற்கு இப்போதைய தேவை இந்த அரசியல் நாகரீகம் தான்
தமிழகத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் இடையே ஆரோக்கியமான உறவுகள் இல்லை. இந்த கட்சியில் உள்ளவர்களிடம் பேசினால், அந்த கட்சியில் உள்ளவர்களும், அந்த கட்சியில் உள்ளவருடன் பேசினால் இங்கும் பிரச்சனை வெடிக்கும். இரு தரப்புக்கும் மோதலே அதிகம் நடந்துள்ளது.
இரு தரப்பிலும் ஆரோக்கியமான விவாதங்களோ, ஒருவரை ஒருவர் தோழமையுடன் குறைகளை சுட்டிக்காட்டி தேர்தலை அணுகும் முறையோ இருந்தது கிடையாது. அந்த அரசியல் முதல்முறையாக 35 வருடங்களுக்கு பிறகு எடப்பாடி-ஸ்டாலின் தமிழகத்தின் பெரும் தலைவர்களாக உருவெடுத்த பின்னர் மாறி உள்ளது.
அதிமுக மீது விமர்சனம்
தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், 4 வருடங்களாக முதல்வர் எடப்படி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக கடுமையான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். ஆளும் கட்சியான அதிமுகவை குற்றம் சாட்டி அவர் வெளியிட்ட பல அறிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தின. பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது. அதைஎல்லாம் எடப்பாடி சமாளித்து அரசியல் செய்து வருகிறார்,
மாறிய வேகம்
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த போது, ஒவ்வொரு கட்டத்தில் அதிமுக அரசின் செயல்களில் வேகம் இல்லை, சோதனைகள் குறைவு, நலத்திட்ட உதவிகள் இல்லை, வேகம் எடுத்து செயல்பட வேண்டும் என்று பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டார். அப்போது ஒரு முறை அறிக்கையில், இந்த அரசு செயல்படாவிட்டால் திமுக செயல்பட வைக்கும் என்றார். அத்துடன் மற்றொரு முறை விரைவில் ஆட்சி மாற்றம் வரும். திமுக எல்லாவற்றையும் சரி செய்யும் என்று கூறியிருந்தார்.
கொரோனா கட்டுப்பாடு
அதன்பிறகு வேகமெடுத்த எடப்பாடி பழனிசாமி, கொரோனா தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்தினார். தளர்வுகளை அதிக அளவு அறிவித்தார். சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த வார்டு வாரியாக அதிகாரிகளை நியமித்தார். இப்படி அடுக்கடுக்காக ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு செயலில் பதில் அளித்தார்.
வரவேற்பு எதிர்ப்பு
ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலினும் இரு கட்சியிலும் தவிர்க்க முடியாத பெரும் தலைவர்களாக உருவெடுத்துவிட்டனர். சரியில்லை என்றால் எதிர்ப்பதும், ஆரோக்கியமானதாக இருந்தால் வரவேற்பதுமாக இருவரும் மாறிவிட்டனர்.
வரவேற்ற ஸ்டாலின்
அண்மையில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்ற அரசின் முடிவை ஸ்டாலின் வரவேற்றார். நீட் உள்பட கல்விதுறையில் பல முடிவுகளை எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் செயல்பட்டார். இப்படி இரு தரப்பும் மாறி மாறி அரசியலில் புதிய நாகரிகத்தை கடைபிடிக்க தொடங்கி உள்ளனர்.
முதல்வருடன் நேரில் சந்திப்பு
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார். முதல்வரின் தாயாரின் மரண செய்தி பற்றி கேள்விப்பட்டு உடனே அவருக்கு தொலைபேசி மூலம் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அதன்பிறகு தற்போது சென்னையில் உள்ள வீட்டுக்கு வந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்களுடன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனை பல்வேறு அரசியல் கட்சியினரும் பாராட்டி உள்ளனர்.
மாணிக்கம் தாகூர் பாராட்டு
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இதுபற்றி வெளியிட்டுள்ள பதிவில், தற்போதைய மத்திய ஆட்சியால் தேசிய அளவில் அழிக்கப்பட்ட முதிர்ச்சியடைந்த அரசியல் கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் மீண்டும் 50 வருடங்களுக்கு பிறகு பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி என கூறியுள்ளார் பத்திரிக்கைகயாளர் ஆர்கே ராதாகிருஷ்ணன்மும் இதை பாராட்டி உள்ளார். வரும் தேர்தலில் யார் வென்றாலும் இந்த அரசியல் கலாச்சாரத்தை தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.